usa govt x page
உலகம்

அமெரிக்காவுக்கு பயணம்.. இனி கனவிலும் நடக்காது.. 7 நாடுகளுக்கு முழுமையான தடை!

தேசிய மற்றும் பொது பாதுகாப்பு, பலவீனமான சரிபார்ப்பு முறைகள், விசா காலாவதி ஆகியவற்றைக் காரணம் காட்டி, மேலும் ஏழு நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டினருக்கு நுழைவுக் கட்டுப்பாடுகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.

Prakash J

தேசிய மற்றும் பொது பாதுகாப்பு, பலவீனமான சரிபார்ப்பு முறைகள், விசா காலாவதி ஆகியவற்றைக் காரணம் காட்டி, மேலும் ஏழு நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டினருக்கு நுழைவுக் கட்டுப்பாடுகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.

அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப், ’அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே’ என்கிற கொள்கையில் பல அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார். குடியேற்றக் கட்டுப்பாடுகள், விசா கட்டணத்தில் மாற்றம் என அவற்றில் அடக்கம். குறிப்பாக, அமெரிக்காவிற்கு வேலைக்காக வரும் வெளிநாட்டினரைக் கட்டுப்படுத்த ட்ரம்ப் நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில், கடந்த நவம்பர் மாத இறுதியில் அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை அருகே வாலிபர் ஒருவர் திடீரென்று துப்பாக்கிச் சூடு நடத்தினார். இந்த தாக்குதலில் தேசிய காவல் படையைச் சேர்ந்த 2 வீரர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து, அதிபர் டொனால்டு ட்ரம்ப், 19 நாடுகளுக்கான கிரீன் கார்டுகளை மறுபரிசீலனை செய்ய USCIS-க்கு உத்தரவிட்டிருந்தார்.

donald trump

அதாவது, ’கவலைக்குரிய நாடுகள்’ என்று வகைப்படுத்தப்பட்ட 19 நாடுகளைச் சேர்ந்த நிரந்தர குடியிருப்பாளர்கள் வைத்திருக்கும் ஒவ்வொரு கிரீன் கார்டையும் விரிவான மதிப்பாய்வு செய்யுமாறு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் (USCIS)-க்கு உத்தரவிட்டிருந்தார். 19 நாடுகளுக்கான இந்தப் பட்டியலில் ஆப்கானிஸ்தான், பர்மா, சாட், காங்கோ குடியரசு, எக்குவடோரியல் கினியா, எரித்திரியா, ஹைட்டி, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், ஏமன், புருண்டி, கியூபா, லாவோஸ், சியரா லியோன், டோகோ, துர்க்மெனிஸ்தான் மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகள் இடம்பெற்றிருந்தன.

இந்த நிலையில், தேசிய மற்றும் பொது பாதுகாப்பு, பலவீனமான சரிபார்ப்பு முறைகள், விசா காலாவதி ஆகியவற்றைக் காரணம் காட்டி, மேலும் ஏழு நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டினருக்கு நுழைவுக் கட்டுப்பாடுகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. அதன்படி, லாவோஸ், சியரா லியோன், புர்கினா பாசோ, மாலி, நைஜர், தெற்கு சூடான் மற்றும் சிரியாஆகிய நாடுகள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு முழுமையான தடையை எதிர்கொள்ளும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த விரிவாக்கப்பட்ட தடை ஜனவரி 1 முதல் அமலுக்கு வர உள்ளது. கூடுதலாக, அங்கோலா, ஆன்டிகுவா மற்றும் பார்புடா, பெனின், கோட் டி'ஐவோயர், டொமினிகா, காபோன், தி காம்பியா, மலாவி, மவுரித்தேனியா, நைஜீரியா, செனகல், தான்சானியா, டோங்கா, சாம்பியா மற்றும் ஜிம்பாப்வே உள்ளிட்ட 15 புதிய நாடுகளில் பகுதி கட்டுப்பாடுகளையும் இந்த பிரகடனம் அறிமுகப்படுத்துகிறது. முன்னதாக, லாவோஸ் மற்றும் சியரா லியோன் ஆகிய நாடுகள் முன்பு பகுதி கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டிருந்தன. காஸாவில் நடைபெற்று வரும் மோதல்களுக்கு மத்தியில், பாலஸ்தீன ஆணையத்தால் வழங்கப்பட்ட பயண ஆவணங்களை வைத்திருக்கும் தனிநபர்கள் மீதான முழு நுழைவு கட்டுப்பாடுகளையும் இந்த உத்தரவு விதிக்கிறது. இந்த பிரகடனம் சட்டப்பூர்வ நிரந்தர குடியிருப்பாளர்கள், ஏற்கனவே உள்ள விசா வைத்திருப்பவர்கள், சில விசா பிரிவுகள் மற்றும் அமெரிக்க தேசிய நலன்களுக்கு சேவை செய்யும் தனிநபர்களுக்கு விதிவிலக்குகளை வழங்குகிறது.

usa govt

டொனால்டு ட்ரம்ப் தனது முதல் பதவிக்காலத்தில், ஏழு பெரும்பான்மை முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த பயணிகள் அமெரிக்காவிற்கு வருவதைத் தடை செய்தார், இந்தக் கொள்கை நீதிமன்ற சவால்களைக் கண்டது. 2017இல் வெளியிடப்பட்ட ட்ரம்பின் பயணத் தடையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இது ஈரான், வட கொரியா, சிரியா, லிபியா, ஏமன், சோமாலியா மற்றும் வெனிசுலாவிலிருந்து பல்வேறு அளவுகளில் நுழைவதைத் தடை செய்தது. இருப்பினும், ஜோ பைடன் 2021இல் அதிபராகப் பதவியேற்றபோது அதை ரத்து செய்தார்.