அமெரிக்காவின் 15 அம்ச கோரிக்கைகளில், ஈரான் சிறிதளவே விருப்பம் காட்டியுள்ளதாகவும், எந்தவொரு பேச்சுவார்த்தையும் தங்களின் கொள்கை ரீதியான நிலைப்பாடுகளுடன் ஒத்துப்போக வேண்டும் எனவும் அந்நாடு வலியுறுத்தி உள்ளதாகக் கூறப்படுகிறது.
மத்திய கிழக்கில் அமெரிக்கா - இஸ்ரேல் - ஈரான் போர், நான்காவது வாரத்தை எட்டியிருக்கும் நிலையில், அது மேலும்மேலும் தீவிரமடைந்து வருகிறது. இதற்கிடையே, உலகின் 20 சதவீதம் கச்சா எண்ணெய் வர்த்தகம் நடைபெறும் ஹார்முஸ் நீரிணைப் பகுதியை ஈரான் முடக்கி வைத்துள்ளது. இதன்காரணமாக உலகளவில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து, மத்திய கிழக்கில் அமைதி திரும்ப வேண்டும் என்று உலக நாடுகள் வலியுறுத்தி வரும் நிலையில், சமீபகாலமாக ஈரானிடம் சுமுகமாகப் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருந்தார். மேலும், 5 நாட்களுக்கு ஈரான் மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்போவதில்லை எனவும் அவர் உறுதியளித்திருந்தார்.
ஆனால், இதை ஈரான் மறுத்த நிலையில், ட்ரம்பையும் கேலி செய்திருந்தது. தவிர, இஸ்ரேல் மீதும் தாக்குதலை நடத்தியது. இதனால், மீண்டும் ஈரான் எல்லையில் படைகள் குவிக்கப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே மேற்காசியப் போரை முடிவுக்குக் கொண்டுவர, ஈரானிடம் 15 அம்ச போர்நிறுத்தத் திட்டத்தை அமெரிக்கா முன்வைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் திட்டம் பாகிஸ்தான் மூலம் ஈரானிய அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டிருப்பதாக நியூயார்க் டைம்ஸ் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இஸ்லாமாபாத்தில் உள்ள அதிகாரிகளின் கூற்றுப்படி, பாகிஸ்தானிய இடைத்தரகர்கள் மூலம் இந்த முன்மொழிவு அளிக்கப்பட்டது. இது, இரு எதிரிகளுக்கும் இடையே ஒரு சாத்தியமான மத்தியஸ்தராக இஸ்லாமாபாத்தின் வளர்ந்து வரும் பங்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. முன்னதாக, அமெரிக்காவும் ஈரானும் ஒப்புக்கொண்டால், பேச்சுவார்த்தையை தங்கள் நாட்டில் நடத்த தயாராக இருப்பதாகவும், அந்த வாய்ப்பு தங்களுக்கு தரப்பட்டால் அதை கௌரவமாகக் கருதுவதாகவும் பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரிப் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அதன்படி அமெரிக்காவின் 15 அம்ச கோரிக்கைகளில், ஈரான் தனது முக்கிய மூன்று அணுசக்தி மையங்களை முடக்கவேண்டும், ஈரானிய மண்ணில் யுரேனியம் செறிவூட்டலை நிறுத்த வேண்டும், கண்டம்விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்கும் பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டங்கள் மற்றும் பிராந்தியக் குழுக்களுக்கான ஆதரவைக் கைவிட வேண்டும், ஹார்முஸ் நீரிணையை முழுமையாகத் திறக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்குப் பதிலாக, ஈரான் மீது சர்வதேச சமூகம் விதித்துள்ள தடைகள் நீக்கப்படும் என்றும் ஈரானின் சிவில் அணுசக்தித் திட்டத்திற்கு அமெரிக்கா உதவி புரியும் எனவும் அமெரிக்கா உறுதியளித்துள்ளது. இந்தத் திட்டத்துக்கு இஸ்ரேல் சம்மதம் தெரிவித்துள்ளதா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. அதேநேரத்தில், ஈரான் அமெரிக்காவின் இந்த கோரிக்கைகளில் சிறிதளவே விருப்பம் காட்டியுள்ளது. எந்தவொரு பேச்சுவார்த்தையும் தங்களின் கொள்கை ரீதியான நிலைப்பாடுகளுடன் ஒத்துப்போக வேண்டும் என அந்நாடு வலியுறுத்தி உள்ளது.