ஈரான் - அமெரிக்கா Pt web
உலகம்

பின்வாங்கும் US; ஹோர்முஸ் திறப்பு.. கையெழுத்தானது ஒப்பந்தம்.. பாக்., பிரதமர் அறிவிப்பு!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நீண்ட நாட்களாக நீடித்து வந்த போரை முடிவுக்குக் கொண்டுவரும் வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது உலகளவில் கவனம் பெற்றுள்ளது.

PT WEB

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பிரான்சில் நடந்த ஜி7 மாநாட்டில் இருந்தபோது, அவரும் ஈரான் அதிபர் மசூத் பெஸெஸ்கியானும் மின்னணு முறையில் இந்த உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளதை இரு நாடுகளும் உறுதிப்படுத்தியுள்ளன. சுமார் 100 நாட்களுக்கும் மேலாக நீடித்த தீவிர மோதலுக்குப் பிறகு, பாகிஸ்தான் நாட்டின் மத்தியஸ்தம் மூலம் இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

இது குறித்து, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப் தனது x தளத்தில், "அமெரிக்காவிற்கும் ஈரான் இஸ்லாமிய குடியரசுக்கும் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க ‘இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தம்’ மின்னணு முறையில் கையெழுத்தாகியுள்ளது என்பதைப் பெருமகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன். இரு நாடுகளின் அதிபர்களால் கையெழுத்திடப்பட்ட இந்த ஒப்பந்தத்தை, மத்தியஸ்தர் என்ற முறையில் நானும் வழிமொழிந்துள்ளேன்.

ட்ரம்ப் - ஷெபாஸ் ஷெரீப்

இந்த ‘இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தம்’ உடனடி அமலுக்கு வருகிறது. இதன் முதற்கட்டமாக, ஈரான் இஸ்லாமிய குடியரசு உடனடியாக ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்கும், அதே நேரத்தில் அமெரிக்கா தனது கடற்படை முற்றுகையை உடனடியாக விலக்கிக் கொள்ளும்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒட்டுமொத்த பிராந்தியத்தின் சிறந்த புரிதல், பரஸ்பர மரியாதை மற்றும் பகிரப்பட்ட செழுமைக்கான ஒரு நிலையான அடித்தளமாக அமையட்டும்" என பதிவிட்டுள்ளார்.

இந்த அமைதி ஒப்பந்தம் உலகப் பொருளாதார சந்தையிலும் கச்சா எண்ணெய் விலையிலும் பெரும் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உட்பட பல உலகத் தலைவர்கள் இந்த அமைதி முயற்சியை வரவேற்றுள்ளனர்.

இருப்பினும், இது இறுதி அல்ல என்பதால் அடுத்த 60 நாட்களுக்குள் இரு நாடுகளும் இறுதி ஒப்பந்தத்தை எட்ட வேண்டும். அதே நேரத்தில், ஒப்பந்த விதிகளை ஈரான் மீறினால் மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் என அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். மேலும், லெபனானில் இஸ்ரேல்-ஹிஸ்புல்லா இடையேயான தற்போதைய மோதல்கள் இந்த அமைதி ஒப்பந்தத்தை முழுமையாகச் செயல்படுத்துவதில் சவாலாக இருக்கலாம் என சர்வதேச அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.

கடந்து பிப்ரவரியில் இருந்து நடந்து வரும் இந்த போரினால் இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் எண்ணெய் நெருக்கடியை சந்தித்தன. தற்போது இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் பாதிக்கப்பட்ட நாடுகளை நிம்மதி பெருமூச்சு விட செய்திருக்கிறது.