ஈரான் போர் ஒப்பந்தத்தின் முழு விவரம்.. அமெரிக்க துணை அதிபர் முக்கிய தகவல்!
ஹார்முஸ் நீரிணை திறப்பு, ஈரானின் பயங்கரவாத நிதி நிறுத்தம், அணு ஆயுதத் திட்டம் கைவிடல், அதற்குப் பதிலாக தடைகள் தளர்த்தல், உலக பொருளாதாரத்தில் மீண்டும் இணைதல் போன்ற அம்சங்கள் ஈரான் - அமெரிக்கா ஒப்பந்தத்தில் இடம்பெறும் என கூறப்படுகிறது.
அமெரிக்கா - ஈரான் மோதலுக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலான ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ள அமெரிக்காவும் ஈரானும் கடந்த ஜூன் 14ஆம் தேதி ஒப்புக்கொண்டன. இதற்கான அதிகாரப்பூர்வ கையெழுத்திடும் விழா சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் வரும் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஆனால் இந்த ஒப்பந்தத்தில் என்ன இருக்கிறது என்ற விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
இந்நிலையில் அமெரிக்கா-ஈரான் ஒப்பந்தத்தின் விவரங்கள் வரும் 19ஆம் தேதிக்குள் வெளியிடப்படும் என்று துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தெரிவித்துள்ளார். இதை இன்னும் முன்னதாகவே வெளியிட அமெரிக்கா முயற்சித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். ஒப்பந்தத்தை மேற்கொள்ள உதவிய கத்தார் மற்றும் பாகிஸ்தான் பேச்சுவார்த்தையாளர்கள், முழு விவரங்களையும் சிறிது காலத்திற்கு வெளியிட வேண்டாம் என்று தங்களைக் கேட்டுக்கொண்டதாகவும் வான்ஸ் கூறியுள்ளார்.
நாங்கள் அதை இன்றே வெளியிட அவர்களை வலியுறுத்தி வருகிறோம்; ஏனெனில் இந்த ஒப்பந்தத்தில் என்ன இருக்கிறது என்பதை அமெரிக்க மக்களுக்குத் தெரிவிக்க நாங்கள் விரும்புகிறோம் என்றும் அமெரிக்க மக்களுக்கு ஒரு நல்ல ஒப்பந்தம் என்றும் குறிப்பிட்ட துணை அதிபர், இது தவறாகச் சித்தரிக்கப்படுவதையும் தான் பார்த்ததாகவும் கூறியுள்ளார்.
இந்த ஒப்பந்தம் ஹார்முஸ் நீரிணையை (Strait of Hormuz) உடனடியாக மீண்டும் திறக்கும் என்றும், பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதை நிறுத்துதல் மற்றும் அணு ஆயுதங்களைத் தொடர்ந்து உருவாக்காமல் இருத்தல் ஆகியவற்றில் ஈரான் நமக்குத் தேவையானதைச் செய்தால், அவர்கள் சில நன்மைகளைப் பெறலாம் மற்றும் உலகப் பொருளாதாரத்தில் மீண்டும் இணைக்கப்படலாம் என்பதற்கான ஒரு கட்டமைப்பை வழங்கும் என்றும் வான்ஸ் கூறியுள்ளார்.
நன்மைகள் என்று நான் கூறுவது, அவர்களின் பொருளாதாரத்தின் மீதான தடைகள் நீக்கப்படுவதையே குறிப்பிடுகிறேன். நாங்கள் அவர்களின் அணுசக்தித் திட்டத்தை அழித்துவிட்டோம். ஆனால், அவர்கள் அணு சக்தித் திட்டத்தை நீண்டகாலத்திற்கு மீண்டும் உருவாக்க முயற்சிக்காததற்கான ஊக்கத்தொகையை அவர்களுக்கு வழங்குவதைப் பற்றியும் பரிசீலித்து வருகிறார் அதிபர் ட்ரம்ப் .
”ஈரானின் முடக்கப்பட்ட அனைத்து நிதிச் சொத்துக்களையும் விடுவிப்பதுடன், அந்நாட்டின் மறுசீரமைப்புக்காக குறைந்தது 300 பில்லியன் டாலர் நிதியுதவி அளிப்பதும் இந்த ஒப்பந்தத்தில் உள்ளதா” என்று கேட்கப்பட்டபோது, ”அமெரிக்கா, இப்பகுதி மற்றும் உலகின் பிற நாடுகளுடன் ஈரான் தனது அணுகுமுறையை அடிப்படையிலேயே மாற்றிக்கொண்டால், ஈரான் சில பொருளாதார நன்மைகளைப் பெற முடியும்” என்று துணை அதிபர் கூறியுள்ளார். எரிபொருள் விலையைப் பொறுத்தவரை, அடுத்த சில வாரங்களில் விலைகள் இன்னும் கணிசமாகக் குறையும் என்று எதிர்பார்ப்பதாகவும் வான்ஸ் கூறியுள்ளார்.

