Nepal flood rescue team Reuters
உலகம்

நேபாளம்: அடையாளம் தெரியாத உடல்கள் அடக்கம்.. உறவினர்கள் தேடிவந்தால் தோண்டி எடுக்க முடிவு!

நேபாள பேரிடரில் உயிரிழந்த அடையாளம் தெரியாத உடல்களை அடக்கம் செய்ய அந்நாட்டு அரசு முடிவுசெய்துள்ளது. பிணவறைகளில் இடமில்லாததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

Rishan Vengai

நேபாளத்தில் பெருவெள்ளத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்து, பிணவறைகளில் இடமின்மை ஏற்பட்டதால் அடையாளம் தெரியாத உடல்களை அரசு மலை, வனப்பகுதிகளில் அடக்கம் செய்ய தொடங்கியுள்ளது. சித்வான் மாவட்டம் உட்பட கிட்டத்தட்ட 100 உடல்களின் டிஎன்ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பின்னர் உறவினர்கள் தேடிவந்தால் ஒப்பிட்டு அடையாளம் காணவும், எலும்புகளை தோண்டி எடுத்து இறுதிச்சடங்குக்கு வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

நேபாள பெருவெள்ளத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பிணவறைகளில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டதால் அடையாளம் தெரியாத உடல்களை அடக்கம் செய்ய அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

Nepal flood

சித்வான் மாவட்டத்தில் உரிமை கோரப்படாத 70 உடல்கள் உட்பட கிட்டத்தட்ட 100 உடல்கள் மலை மற்றும் வனப்பகுதிகளில் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. உடல்களை அடக்கம் செய்வதற்கு முன் டிஎன்ஏ மாதிரிகள் சேகரிக்கப்படுகின்றன. உறவினர்களின் டிஎன்ஏ மாதிரிகளுடன் ஒப்பிட்டு பின்னர் உயிரிழந்தவர்களை அடையாளம் காணவும், அடையாளம் உறுதி செய்யப்பட்டால் அடக்கம் செய்யப்பட்ட இடத்திலிருந்து எலும்புகளை எடுத்து இறுதிச்சடங்குக்கு வழங்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.

திரிசூலி ஆற்றில் அடித்துவரப்பட்ட உடல்கள் காத்மாண்டு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அதிகரிக்கும் உயிரிழப்புகள் காரணமாக உடல்களை அடையாளம் காண்பதும் பாதுகாப்பதும் மீட்புக் குழுவினருக்கு சவாலாகியுள்ளது.