செய்தியாளர் - கார்த்திகேயன்
அதிபர் புதினின் திட்டங்களுக்குப் பெருத்த அடி கொடுக்கும் வகையில், ரஷ்யாவிற்குள் புகுந்து எண்ணெய் ஆலைகள் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் நடத்திய தாக்குதலில் கடந்த 7 மாதங்களில் மட்டுமே 30-க்கும் மேற்பட்ட எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் அழிக்கப்பட்டுவிட்டன. இதனால், இந்தியாவிடம் இருந்து பெட்ரோலை இறக்குமதி செய்யும் அளவுக்கு, ரஷ்யா கடுமையாகப் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில், அதிபர் புதினின் அடிமடியிலேயே உக்ரைன் கை வைத்துவிட்டதாக, தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, ரஷ்யாவின் ஜெலென்ட்ஜிக் என்ற பகுதியில் அதிபர் விளாடிமிர் புதினின் ஆடம்பரமான மாளிகை ஒன்று உள்ளது. 17,700 சதுர மீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்துகிடக்கும் இந்த மாளிகையில், 16 மாடிகளும், பதுங்குக்குழிகளும் இருக்கின்றன. ஓர் அணு ஆயுத் தாக்குதலையே தாங்கும் வகையில் பாறைக்குள் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மாளிகை, 1 பில்லியன் பவுண்டு பணத்தை வைத்து, மிகவும் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டுள்ளது. இந்த மாளிகை, எலக்ட்ரிக் வார்ஃபேர் எனும் அதிநவீன அமைப்பு மற்றும் ஏவுகணைகளை தடுத்து நிறுத்தும் எஸ்-400 என்ற வான் பாதுகாப்பு தளம் மூலம் பாதுகாக்கப்பட்டு வந்தது.
ஆனால், இதில், எலக்ட்ரிக் வார்ஃபேர் அமைப்பை முற்றிலும் அழித்துள்ள உக்ரைன் ராணுவம், S-400 பாதுகாப்பு அமைப்பின் மீது தனது குறியை வைத்துள்ளது. இதுவும் அழிக்கப்பட்டால் மாளிகை தகர்க்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. புதினின் இந்த மாளிகை அழிக்கப்பட்டால், அதற்கு ரஷ்யா என்ன எதிர்விணையாற்றும் என்பது போர்ப் பதற்றங்களை இன்னும் கூடுதலாக அதிகரித்திருக்கிறது.