இமயமலையில் பனிப்பாறை சரிவால் உருவான தற்காலிக அணை உடைந்து, 130-160 அடி உயரம் வரை வெள்ளம் சீறிப்பாய்ந்து நேபாள ரசுவா மாவட்டத்தை சீரழித்தது. 5.2 ரிக்டர் நிலநடுக்கத்துக்கு இணையான ஆற்றல் வெளிப்பட்ட இந்த “மிகப்பெரிய புவி இயற்பியல் நிகழ்வு” காரணமாக 93000 பேர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என மதிப்பிடப்படுகிறது. கடினமான மலைப்பரப்பு, ஹெலிகாப்டர் தரையிறங்க இடமின்மை ஆகியவை மீட்புப் பணிகளை மேலும் சிக்கலாக்குகின்றன.
நேபாளம் நாட்டின் ரசுவா மாவட்டத்தில் உள்ள போடே கோஷி ஆற்றில் ஆகஸ்டு 26-ஆம் தேதி ஏற்பட்ட மாபெரும் வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 392 பேர் அதிகாரப்பூர்வமாக உயிரிழந்துள்ளனர்.
சீறிப்பாய்ந்த வெள்ளத்தால் அங்கு சுற்றியிருந்த குடியிருப்புகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டது மட்டுமில்லாமல், வாகனங்கள் செல்லக்கூடிய குறைந்தது 19 பாலங்கள் மற்றும் 40 கிலோமீட்டருக்கும் அதிகமான சாலைகளும் சிதைக்கப்பட்டன. இதன் காரணங்களால் ஆயிரக்கணக்கானோர் ஆழமான சேற்றில் சிக்கித் தவிப்பதோடு, அவசரகாலத் தகவல் தொடர்புகளிலிருந்தும் துண்டிக்கப்பட்டுள்ளனர்.
தற்போதுவரை 1400-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயிருக்கும் நிலையில், 7000-க்கும் மேற்பட்ட போலீஸார் மற்றும் 4000-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் மீட்புபணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
எந்த அறிகுறிகளும் இல்லாமல் திடீரென ஏற்பட்ட இந்த இயற்கை சீற்றத்திற்கு 2 காரணங்களை விஞ்ஞானிகள் முக்கியமாக தெரிவிக்கின்றனர்.
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பேரழிவுக்கு இயற்கையான அதன் புவிப்பரப்பும் முக்கிய காரணம் என நிபுணர்கள் கூறுகின்றனர். உலகின் மிக உயர்ந்த மலைச்சிகரங்களும், அவற்றுக்கு இடையே குறுகிய நதிப் பள்ளத்தாக்குகளும் நேபாளத்தில் அதிகம் உள்ளன. இந்த அமைப்பு ஒரு புனல் போலச் செயல்பட்டு, பாய்ந்து வரும் நீரின் வேகத்தை இயற்கையாகவே பலமடங்கு அதிகரிக்க செய்கின்றன. மலை உச்சியிலிருந்து கீழ்நோக்கிப் பாயும் நீர், ஈர்ப்பு விசையின் காரணமாக அபாரமான இயக்க ஆற்றலைப் பெறும் போது அதனுடன் டன் கணக்கில் மணலும் ராட்சத பாறைகளும் பெயர்த்து அடித்து வருவதால் சாதாரண வெள்ளம் கூட பெரிய பேரழிவை ஏற்படுத்துகிறது. புதன்கிழமை நடந்ததும் இது மாதிரியான கோர நிகழ்வு தான்.
இமயமலையின் உச்சிப்பகுதியில் சமநிலை குலைந்து சரிந்த பனிப்பாறைகள் நதியின் குறுக்கே தற்காலிக அணையாக மாறியுள்ளன. இதனால் அதிகளவிலான தண்ணீர் ஒரே இடத்தில் தேங்கி அழுத்தம் அதிகரித்த நிலையில், திடீரென தடுப்பு உடைந்து பலமடங்கு வேகத்தில் கீழ்நோக்கி பாய்ந்த வெள்ளம், தனது வழியில் இருந்த அனைத்தையும் அழித்தது. அதுமட்டுமின்றி பேரிடர் நிகழ்ந்த பிறகு உடனடியாக தொடங்கப்பட வேண்டிய மீட்புப் பணிகளும் நேபாளத்தில் மிகப்பெரிய சவாலாகத்தான் உள்ளன. மலைப்பகுதிகளில் மீட்புப் ஹெலிகாப்டர்கள் தரையிறங்க போதுமான சமவெளி பகுதிகள் இல்லாததாலும், அதீத காற்றோட்டத்தாலும் மீட்புப் பணிகள் பாதிக்கப்படுகின்றன. இதனால் உணவு, மருந்து போன்ற அடிப்படை உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டு உயிரிழப்புகள் அதிகரிப்பதாக சொல்லப்படுகிறது.
இமயமலைப் பகுதியில் உள்ள மலைப்பாதையில் பகல் நேரத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக, அதன்மீது படர்ந்திருந்த பனிப்பாறை நிலத்தின் ஒரு பெரிய பகுதியை அடித்துச் சென்றது. இந்த நிகழ்வு மிகவும் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதாவது உலகெங்கிலும் உள்ள நில அதிர்வுமானிகளில் பதிவுசெய்யப்பட்ட 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்திற்கு இணையான ஆற்றலை இது ஏற்படுத்தியதாக சொல்லப்படுகிறது.
இந்த அதிதீவிர ஆற்றலால் மலையிலிருந்து பாறைகள் உருண்டு வரும்போது, அது இன்னும் கூடுதலான அதிக ஆற்றலை உருவாக்கி வெப்பமடைவதால் அந்த மாபெரும் பனிப்பாறை உருகுகிறது. இதன் காரணமாகவே மலையின் அடிவாரத்தில் அதிக நீர் வெள்ளமாக பெருக்கெடுத்திருக்கலாம். இந்த வெள்ளம் எந்த அளவு இருந்திருக்கலாம் என்றால், அது சுமார் 130-160 அடி உயரம் வரை இருந்திருக்கலாம் என்றும், அந்த நீர் மணிக்கு 44 மைல் வேகத்தில் நகர்ந்திருக்கக்கூடும் என்றும் விஞ்ஞானி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இமயமலையில் இதுபோன்ற நிகழ்வுகள் இதற்கு முன்பும் நடந்துள்ளன என்றாலும், இது ஒரு "மிகப்பெரிய புவி இயற்பியல் நிகழ்வு" என்று அந்த விஞ்ஞானி குறிப்பிட்டுள்ளார். இந்த மாபெரும் இயற்கை கோரத்தாண்டவத்தால் மொத்தமாக 93000 பேர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என ஒரு தகவல் கூறுகிறது.