model image
model image twitter
உலகம்

தொடரும் சோகம்: அமெரிக்காவில் கார் மோதி 2 இந்திய மாணவர்கள் உயிரிழப்பு

Prakash J

அமெரிக்காவில் இந்திய மாணவர்களின் மரணமும், இந்தியர்கள் தாக்கப்படும் சம்பவங்களும் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 2 பேர் கார் மோதி பலியாகி உள்ளனர்.

தெலங்கானாவைச் சேர்ந்த நிவேஷ் முக்கா மற்றும் கௌதம் பார்சி ஆகியோர் அமெரிக்க அரிசோனா மாநில பல்கலைக்கழகத்தில் படித்து வந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி அரிசோனாவில் உள்ள லேக் பிளசன்ட் அருகே நேருக்குநேர் கார்கள் மோதிய விபத்தில், மேற்கண்ட இரண்டு இந்திய மாணவர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருப்பதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதில் நிவேஷ் கரீம்நகர் மாவட்டத்தில் உள்ள ஹுசூராபாத் நகரைச் சேர்ந்தவர் என்பதும், கெளதம் ஜங்கான் மாவட்டத்தில் உள்ள ஸ்டேஷன் கான்பூரைச் சேர்ந்தவர் என்பதும், இவர்கள் இருவரும் அரிசோனா மாநில பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் பொறியியல் படித்து வந்தனர் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த விசாரணை தொடர்பாக அவர்களுடைய குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பதாக காவல் துறை தெரிவித்துள்ளது. 2024ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, அமெரிக்காவில் இந்திய வம்சாவளி மாணவர்கள், இந்தியர்கள் மரணம் அடைவது தொடர்ந்து அரங்கேறி வருவது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு 10 மரணங்கள் நடைபெற்றதாகவே ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன என்பது கவனிக்கத்தக்கது.

இதையும் படிக்க: 2022-ல் 65,960 இந்தியர்களுக்கு அமெரிக்க குடியுரிமை.. இரண்டாவது இடத்தில் இந்தியா!