ஈரான் போரில் வெற்றி பெற்றதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்தாலும், தளபதிகளின் நேரடி மதிப்பீடுகள் அமெரிக்காவுக்கு கடுமையான சிக்கலை காட்டுகின்றன. பேட்ரியாட், ATACMS உள்ளிட்ட முக்கிய ஏவுகணை கையிருப்புகள் குறைந்து, ஹார்முஸ் நீரிணை பதற்றம் உயரும் நிலையில், சீனா, ரஷ்யா, வடகொரியா அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் திறன் பாதிக்கப்படுமோ என்ற கவலை எழுகிறது.
செய்தியாளர் - M. மீரா
ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்கா ராணுவ ரீதியாக வெற்றி பெற்றதாக அதிபர் டொனால்டு ட்ரம்ப் தொடர்ந்து கூறி வரும் நிலையில், அமெரிக்க ராணுவத் தளபதிகளிடம் இருந்து வரும் தகவல்கள் அதற்கு நேர்மாறாக இருக்கிறது. நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட தகவலின்படி, அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், மத்திய கிழக்கு, ஐரோப்பா மற்றும் ஆசியாவில் உள்ள அமெரிக்க ராணுவத் தளபதிகளிடம் நேரடியாக போரின் நிலவரம் குறித்து கேட்டறிந்ததாகக் கூறப்படுகிறது. வழக்கமான பென்டகன் அறிக்கைகளை மட்டுமே நம்பாமல், களத்தில் இருக்கும் தளபதிகளின் நேரடி மதிப்பீடுகளை அறியவே அவர் இந்த ஆலோசனைகளை மேற்கொண்டதாக தெரிகிறது.
அதில் வெளியான தகவல்கள் அமெரிக்காவுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் இருந்துள்ளது. முக்கியமாக, பேட்ரியாட் வான் பாதுகாப்பு ஏவுகணைகள் உள்ளிட்ட முக்கிய ஆயுதங்களின் கையிருப்பு வேகமாக குறைந்து வருவதாக ராணுவ அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஒரு ராணுவப் பிராந்தியத்தில் 100-க்கும் குறைவான பேட்ரியாட் இடைமறிப்பு ஏவுகணைகளே இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அதேபோல், Army Tactical Missile Systems எனப்படும் ஏவுகணைகளின் கையிருப்பு சில பகுதிகளில் தீர்ந்துவிட்டதாகவும், துல்லியத் தாக்குதல் ஏவுகணைகளின் விநியோகத்திலும் அழுத்தம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முக்கியமான ஆயுதங்களின் கையிருப்பு இதுவரை இல்லாத அளவுக்கு குறைந்துள்ளதாக தளபதிகள் எச்சரித்ததாக கூறப்படுகிறது. இதனால் அமெரிக்காவுக்கு மிகப்பெரிய சிக்கல் உருவாகியுள்ளது. ஈரான் போருக்கு அதிக ஆயுதங்களை அனுப்பினால், சீனா, ரஷ்யா மற்றும் வடகொரியா போன்ற நாடுகளால் உருவாகக்கூடிய அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள அமெரிக்காவின் திறன் பாதிக்கப்படலாம் என்ற கவலை எழுந்துள்ளது.
மேலும், ஈரான் கடுமையான தாக்குதல்களையும் தாங்கிக்கொண்டு, தனது ராணுவ உத்திகளை மாற்றிக்கொண்டு தொடர்ந்து போராடும் திறன் கொண்டதாக இருப்பதாக அமெரிக்கா நடத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக ஹார்முஸ் நீரிணையைச் சுற்றி பதற்றம் அதிகரிக்கும் அபாயமும் அமெரிக்க அதிகாரிகளுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது.
இதற்கிடையே, அமெரிக்காவின் பொருளாதார நிலைமையும் புதிய கேள்விகளை எழுப்புகிறது. ட்ரம்ப் ஒவ்வொரு அமெரிக்க வயது வந்த குடிமகனுக்கும் 5,000 டாலர் ‘ட்ரம்ப் டிவிடெண்ட்’ வழங்கும் திட்டத்தை முன்வைத்துள்ளார். சுமார் 24 கோடி வயது வந்தவர்கள் இருப்பதாக கணக்கிட்டால், இதற்கான மொத்த செலவு சுமார் 1.2 டிரில்லியன் டாலராக இருக்கலாம்.
மேலும், அமெரிக்காவின் தேசியக் கடன் ஏற்கெனவே 40 டிரில்லியன் டாலரைத் தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஈரான் போருக்கான செலவும் அதிகரித்து வருகிறது. பாதுகாப்புத் துறை அமைச்சர் பீட் ஹெக்செத், போருக்கான அமெரிக்க செலவு சுமார் 37.5 பில்லியன் டாலர் என செனட் விசாரணையில் தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும் பென்டகனுக்கு 87 பில்லியன் டாலர் கூடுதல் நிதி கோரப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஒருபுறம் ஈரானை வீழ்த்துவதற்கான ராணுவ அழுத்தம், மறுபுறம் குறைந்து வரும் ஆயுதக் கையிருப்பு, அதிகரிக்கும் போர் செலவு, 40 டிரில்லியன் டாலரைத் தாண்டிய கடன் என அமெரிக்கா பல முனைகளில் சிக்கலை எதிர்கொள்கிறது.
அமெரிக்கா ஈரானை விரைவில் பணிய வைக்க முடியாவிட்டால், நீண்டகாலப் போர் வாஷிங்டனுக்கே மிகப்பெரிய சுமையாக மாறுமா? ஈரான், அமெரிக்காவின் அடுத்த வியட்நாமாக மாறுமா? என்ற கேள்வி தற்போது சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.