2027-ம் ஆண்டுக்கான உலகலாவிய போதைப்பொருள் உற்பத்தி மற்றும் கடத்தல் நாடுகளின் பட்டியலை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. 23 நாடுகளைக் கொண்ட அந்தப் பட்டியலில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது. மேலும், சீனா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், மெக்சிகோ ஆகிய நாடுகளும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
இருப்பினும், இந்தியாவில் அபினி கசகசா சாகுபடி மற்றும் விநியோகச் சங்கிலி ஒருமைப்பாட்டைத் தடுக்க பிரதமர் நரேந்திர மோடியும் இந்திய அரசாங்கமும் எடுத்துவரும் முயற்சிகளை அதிபர் ட்ரம்ப் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
அதேநேரத்தில், இந்தப் பட்டியலில் இந்தியா இடம்பெற்றிருப்பது, போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் இந்திய அரசு தோல்வியடைந்துவிட்டது என்பதைக் குறிக்காது என அமெரிக்கா தெளிவுபடுத்தியுள்ளது. புவியியல், வர்த்தகம் மற்றும் பொருளாதார காரணிகளால் சில நாடுகள் போதைப்பொருட்கள் உற்பத்தி அல்லது கடத்தலுக்கான பாதைகளாக அமையக்கூடிய சூழல் இருப்பதால், அவை இந்தப் பட்டியலில் சேர்க்கப்படுவதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த ஓராண்டில் சர்வதேச போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் தங்கள் கடமைகளை வெளிப்படையாக நிறைவேற்றத் தவறிய நாடுகளின் தனிப்பட்ட பட்டியலில் இந்தியா இடம்பெறவில்லை.
இந்தியா - அமெரிக்கா இடையேயான போதைப்பொருள் கொள்கைக் கட்டமைப்பு (United States-India Drug Policy Framework) மூலம் இரு நாடுகளும் இணைந்து போதைப்பொருள் கடத்தலை எதிர்த்துத் தொடர்ந்து செயலாற்றும் என்று அமெரிக்காவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.