அமெரிக்கா - ஈரான் போர் web
உலகம்

ஈரான் அழிக்கப்பட்டுவிட்டது.. அமெரிக்கா வென்றுவிட்டது.. டிரம்ப் அதிரடி அறிவிப்பு!

இந்த போரில் ஈரான் அழிக்கப்பட்டு விட்டதாகவும், அமெரிக்கா உறுதியான வெற்றியை பெற்றுள்ளதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

PT WEB

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானில் நடத்தி வரும் போரில், ஈரான் அழிக்கப்பட்டதாகவும், அமெரிக்கா வென்றுவிட்டதாகவும் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

ஈரானில் ஆட்சி மாற்றத்தை நோக்கமாக கொண்டு கடந்த ஒரு வாரத்துக்கு முன்னர் Operation Epic Fury என்ற பெயரில் அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. அதே போல இஸ்ரேலும் Operation Roaring Lion என்ற பெயரில் ஈரானை தாக்கி வருகிறது.

அமெரிக்கா - ஈரான்

இந்த போரில் முதல் நாளிலேயே ஈரானில் பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், அந்நாட்டின் உட்சபட்ச தலைவராக இருந்த அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். மேலும் பல உயர் அதிகாரிகள் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் ராணுவ தளங்கள் மீதும், அமெரிக்காவின் ராணுவ தளங்கள் உள்ள மத்திய கிழக்கு நாடுகள் மீதும் ஈரான் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.

ஆனால், இஸ்ரேல் - அமெரிக்காவின் தாக்குதலில் ஈரானில் பெரிய அளவில் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக பல்வேறு செய்தி நிறுவனங்களும் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சூழலில், அமெரிக்காவின் Axios என்ற தனியார் செய்தி நிறுவனத்துக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் பேட்டியளித்துள்ளார்.

அமெரிக்கா வென்றுவிட்டது..

அப்போது பேசிய அவர், போரின் முதல் நாளின் மூன்று மணி நேரத்திலேயே ஈரானின் விமானப்படை, ரேடார் அமைப்புகள் மற்றும் வான்வழித் தற்காப்பு தளங்கள் முடக்கப்பட்டதாகவும், ஈரானின் ஏவுகணைகள் 90% அளவிற்கும், ட்ரோன்கள் 85% அளவிற்கும் அழிக்கப்பட்டுவிட்டதாகவும் கூறியுள்ளார்.

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

மேலும், கடந்த ஆண்டு ஆபரேஷன் மிட்நைட் ஹேமர் (Operation Midnight Hammer) நடவடிக்கையின் மூலம் ஈரானின் அணுசக்தித் திட்டங்களை முடக்கியதாகவும், தற்போது அந்த வேலையை முழுமையாக முடிக்கப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதே போல, ஈரானுக்கு எதிரான தாக்குதலில் நாம் வெற்றிபெற்றுவிட்டோம் என்றும், ஈரானில் இனி அழிப்பதற்கு எதுவும் இல்லாததால், எப்போது வேண்டுமானாலும் போரை நிறுத்துவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.