ஈரான்–அமெரிக்கா இடையிலான போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் நீடிக்கும் நிலையில், செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை சர்வதேச மேற்பார்வையில் முழுமையாக அழிக்க வேண்டும் என்று டொனால்ட் டிரம்ப் வலியுறுத்துகிறார். யுரேனியம் அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்படவோ அல்லது ஏற்றுக்கொள்ளத்தக்க இடத்தில் செயலிழக்கச் செய்யப்படவோ வேண்டும் என அவர் கூறியுள்ள நிலையில், ஹார்முஸ் நீரிணை திறப்பு ஒப்பந்தமும் இறுதிக்கட்டத்தில் உள்ளது.
அமெரிக்கா - இஸ்ரேல் - ஈரான் இடையே நடைபெற்ற போரின் காரணமாக 20 சதவிகிதம் கச்சா எண்ணெய் வர்த்தகம் நடைபெறும் ஹார்முஸ் நீரிணையில், அமெரிக்காவும் ஈரானும் தங்கள் கட்டுப்பாட்டை நிலைநாட்டும் போட்டியில் ஈடுபட்டு வருகிறது.
போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தாலும், போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகள் இழுபறியாகவே இருந்துவருகிறது . பேச்சுவார்த்தைகளுக்கு பாகிஸ்தான் மத்தியஸ்தராக செயல்பட்டு வந்தது. இப்பேச்சுவார்த்தையில் ஈரானிடம் இருக்கும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது அமெரிக்காவின் பிரதான கோரிக்கையாக இருந்தது. அதனை ஈரான் ஒத்து கொள்ளாததால் பேச்சு வார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படாமல் இருந்து வந்தது
இந்த சூழலில் மேற்கு ஆசிய பதற்றத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக, போர் நடவடிக்கைகளை நிறுத்தி ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்கும் ஒப்பந்தத்தை அமெரிக்கா மற்றும் ஈரான் விரைவில் இறுதிப்படுத்த உள்ளதாக டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து அமைதி பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக, தனது அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பை கைவிட ஈரான் ஒப்புக்கொண்டதாக செய்திகள் வெளியானது.
எனினும், யுரேனியத்தை அகற்றுவதற்கான துல்லியமான வழிமுறை குறித்து அதாவது யுரேனியத்தை எவ்வாறு இடமாற்றம் செய்வது, நீர்த்துப்போகச் செய்வதா அல்லது வேறு ஏதேனும் வகையில் செயலிழக்கச் செய்வதா என்பது குறித்த விரிவான பேச்சுவார்த்தைகள் கூடிய விரைவில் நடை பெறும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் அதிபர் டிரம்ப் திங்களன்று 'ட்ரூத் சோஷியல்' X தளத்தில், சர்வதேச மேற்பார்வையின் கீழ் ஈரான் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அழிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஈரான் தனது நாட்டில் அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அப்புறப்படுத்தினால் அல்லது ஏற்றுக்கொள்ளக்கூடிய மற்றொரு இடத்துக்கு மாற்றினால் , சர்வதேச அணுசக்தி முகமை அங்கு உடனிருக்க வேண்டும் என்றும் அல்லது செறிவூட்டப்பட்ட யுரேனியம் உடனடியாக அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்டு, அங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்டு அழிக்கப்படும். இல்லையென்றால் ஈரான் அணுசக்தி ஆணையம் அல்லது அதற்கு இணையான அமைப்பின் மேற்பார்வையின் கீழ் செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருக்கும் இடத்திலேயே அல்லது ஏற்றுக்கொள்ளக்கூடிய மற்றொரு இடத்தில் அழிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
இதற்கிடையே ஈரானில் ஏவுகணை ஏவுதளங்கள் மற்றும் கண்ணிவெடிகளைப் புதைக்க முயன்ற ஈரானியப் படகுகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது. இதனை தற்காப்புத் தாக்குதல்கள் என்று CENTCOM தெரிவித்துள்ளது; மேலும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் சூழலில் போர்நிறுத்தம் இன்னும் அமலில் உள்ளது என்றும் CENTCOM கூறியுள்ளது.