ஹமாஸ் உடனான போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இஸ்ரேல் - காஸா போரை முடிவுக்குக் கொண்டுவர உலக நாடுகள் பலவும் ஒருசேர குரல்கொடுத்து வரும்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது 20 அம்ச அமைதித் திட்டத்தைப் பரிந்துரைத்தார். இப்பரிந்துரை, போர் நிறுத்தம், ஹமாஸிடம் பிடிப்பட்டிருக்கும் பிணைக்கைதிகளை 72 மணி நேரத்திற்குள் விடுவித்தல், இஸ்ரேல் படிப்படியாக காஸாவிலிருந்து வெளியேறுதல் ஆகியவற்றை வலியுறுத்துகிறது.
இந்தத் திட்டத்திற்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவும் ஒப்புதல் அளித்த நிலையில், ஹமாஸ் உடனான போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது ட்ரூத் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், காஸாவில் இருந்து படைகளை திரும்பப் பெறுவதற்கு இஸ்ரேல் அரசு முதற்கட்ட சம்மதம் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் தகவல் ஹமாஸ்-க்கு தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும், ஹமாஸ் அமைப்பினரும் தங்கள் படைகளை திரும்பப் பெற்றால் போர் நிறுத்தம் உடனடியாக அமலுக்கு வரும் என்றும் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
அதன்பின்னர் ஹமாஸ் வசமுள்ள இஸ்ரேல் பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டு, இஸ்ரேல் படைகள் படிப்படியாக காஸாவில் இருந்து விலக்கிக் கொள்ளப்படும் என்றும் ட்ரம்ப் உறுதியளித்துள்ளார்.