அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்றதிலிருந்து, அந்நாட்டின் குடியேற்றம் மற்றும் விசா நடைமுறைகள் தொடர்ந்து கடுமையாக்கப்பட்டு வருகின்றன. வெளிநாட்டினரின் பின்னணி, விசா விதிமீறல்கள் மற்றும் சட்டவிரோத செயல்பாடுகள் தீவிரமாக கண்காணிக்கப்படும் நிலையில், ட்ரம்ப் அரசாங்கம் இதுவரை 1 லட்சத்து 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசாக்களை ரத்து செய்துள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை கடந்த சில தினங்களுக்கு முன் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில்தான், இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள அமெரிக்காவின் எல்லைப் பாதுகாப்பு அதிகாரி டாம் ஹோமன் (Tom Homan) “இது வெறும் தொடக்கம் மட்டுமே” என எச்சரிக்கை விடுத்திருப்பது சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.
Fox News நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஹோமன், அமெரிக்க நிர்வாகம் தற்போது அனைத்து விசாக்களையும் மறுஆய்வு செய்து வருவதாகவும், அமெரிக்க விசா என்பது ஒருவரின் உரிமை கிடையாது என்றும், அது ஒரு சலுகை என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், அமெரிக்காவுக்கு வருபவர்கள் தங்களது அடையாளம் மற்றும் வருகைக்கான காரணம் குறித்து உண்மையாக இருக்க வேண்டும். அமெரிக்காவில் இருக்கும் காலத்தில் அந்நாட்டு சட்டங்களை முறையாகப் பின்பற்ற வேண்டும் என எச்சரித்த அவர், குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள், அமெரிக்க சட்டங்களை மீறியவர்கள் மற்றும் விசா விதிமுறைகளை மீறியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்திருக்கிறார்.
அமெரிக்காவில் ஏற்கனவே 1.75 லட்சம் விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டு அதிகாரி ஒருவர் ”இது வெறும் ஆரம்பம் தான்” எனத் தெரிவித்திருப்பது, எதிர்காலத்தில் மேலும் பல விசாக்கள் ரத்து செய்யப்படலாம் என்ற அச்சம் ஏற்படுத்தியுள்ளது.