ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே கடந்த ஒரு மாதமாக போர் பதற்றம் நிலவிய நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் 5 நாட்களுக்கு முன்னர், இஸ்ரேல் அமெரிக்க ஆதரவுடன் ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. Operation Epic Fury என்ற பெயரில் அமெரிக்காவும், Operation Roaring Lion என்ற பெயரில் இஸ்ரேலும் நடத்திவரும் இந்த தாக்குதலில் ஈரானின் பல்வேறு பகுதிகளிலும் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது.
ஈரானின் அணுசக்தித் திட்டங்களை முழுமையாக முடக்குவது, ஈரானின் ஏவுகணை மற்றும் பாதுகாப்பு உள்கட்டமைப்புகளைத் தகர்ப்பது, ஈரானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவது ஆகியவை இந்த தாக்குதலின் நோக்கமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் முதல் நாளிலேயே ஈரானின் அதிஉயர் தலைவர் அயத்துல்லா காமேனியை இஸ்ரேல் குண்டுவீசி படுகொலை செய்தது. இதன்மூலம் 1989 முதல் ஈரானின் உச்ச அதிகாரத்தில் இருந்த அவரது 37 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்தது. அவரின் மரணம் ஈரானை கடுமையாக கோபப்படுத்தியுள்ள நிலையில், அதற்கு ஈரான் தீவிரமாக பதிலடி கொடுத்து வருகிறது.
இந்த நிலையில், அயத்துல்லா காமேனி எப்படி கொல்லப்பட்டார் என்பதை இஸ்ரேல் ராணுவம் வீடியோ காட்சிகளை வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளது. இஸ்ரேல் வெளியிட்ட அந்த வீடியோவில், காமேனி அந்தச் சமயம் எங்கு இருந்தார் என்பதை மொசாட் மற்றும் சிஐஏ (CIA) உளவு அமைப்புகள் துல்லியமாகக் கண்காணித்து தகவல்களை தந்ததாகக் கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்த தகவலின் அடிப்படையில் ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் உள்ள ஈரானியத் தலைமை வளாகத்தின் (Leadership Compound) அடியில் அமைக்கப்பட்டிருந்த மிகவும் பாதுகாப்பான மறைவிடத்தில் காமேனி பதுங்கி இருந்தது உறுதி செய்யப்பட்டதாகவும், அதன் அடிப்படையில் F-35 மற்றும் F-15 ரகத்தைச் சேர்ந்த 50 இஸ்ரேலிய போர் விமானங்கள் இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த விமானங்களில் இருந்து ஏவப்பட்ட அணு ஆயுதங்களைத் தாக்கும் திறன் கொண்ட சக்திவாய்ந்த குண்டுகள் மூலம் காமேனி பதுங்கி இருந்த பங்கர் தரைமட்டமாக்கப்பட்டதாக அந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளது. இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.