இஸ்ரேலும் அமெரிக்காவின் கூட்டணி அமைத்து ஈரான் மீது தாக்குதல் நடத்திய நிலையில், உலகம் மற்றொரு போருக்கு தள்ளப்பட்டுள்ளது.
ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே கடந்த சில மாதங்களாக தொடர்ந்து போர் பதற்றம் நிலவி வந்தது. அமெரிக்கா தனது இரண்டு முக்கிய விமானம் தாங்கிக் கப்பல்களை ஈரானுக்கு அருகே கொண்டுவந்து நிறுத்தியது நிலைமையில் தீவிரத்தை அதிகரித்தது.
இதனால் எப்போது வேண்டுமானாலும் போர் ஏற்படலாம் என்ற அச்சம் நிலவிய நிலையில், இஸ்ரேல் அமெரிக்காவின் உதவியோடு ஈரானின் தலைநகர் தெக்ரான் உள்ளிட்ட பகுதிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்துள்ள நிலையில், இந்த இரண்டு தரப்புக்கும் இடையே மீண்டும் போர் உருவாகியுள்ளது.
இந்தப் போரை புரிந்துகொள்ள வேண்டும் என்றால், இந்த நாடுகளுக்கு இடையே நிலவிவரும் பிரச்னைகளை தெரிந்துகொள்ள வேண்டும். ஈரானில் பல ஆண்டுகளாக தொடர்ந்து வந்த மன்னராட்சியை முடிவுக்கு கொண்டுவந்து 1979-ஆம் ஆண்டு ஈரானின் முக்கியமான மதத்தலைவராக இருந்த அயதுல்லா கொய்மேனி ஆட்சியைப் பிடித்தார். அதோடு அமெரிக்காவின் ஆதரவு பெற்ற ஈரானின் கடைசி மன்னரான முகமது ரெஸா ஷா பஹ்லவியின் ஆட்சிக்கு முடிவுக்கு வந்தது.
இதனால் ஈரானின் புதிய அரசுக்கு அமெரிக்கா பல்வேறு வகையில் குடைச்சல்களை கொடுத்து வந்தது. மத்திய கிழக்குப் பகுதியில் உள்ள இஸ்லாமிய நாடுகள் அனைத்தையும் சன்னி பிரிவைச் சேர்ந்தவர்களே ஆண்டுவந்த நிலையில், ஈரானில் மட்டும் சியா பிரிவைச் சேர்ந்தவர்கள் ஆட்சிக்கு வந்ததை, அந்த பிராந்தியத்தில் உள்ள இஸ்லாமிய நாடுகளே விரும்பவில்லை. இதனால் ஈரானுக்கும் அருகில் இருந்த பிற இஸ்லாமிய நாடுகளுக்கும் இடையே உறவு மோசமடைந்தது.
இப்படி பிராந்தியத்தில் தனது எந்தவித ஆதரவும் இல்லாத நிலையில், ஈரான் தனது ராணுவத்தை வளர்க்க பெரும் தொகையை செலவு செய்தது. அதேபோல அணு ஆயுதம் தயாரிக்கவும் ஈரான் தொடர்ந்து முயற்சித்து வந்தது. இது அந்தப் பகுதியில் உள்ள நாடுகளுக்கு கடும் அச்சத்தை ஏற்படுத்திய நிலையில், அந்த நாடுகள் அடுத்தடுத்து அமெரிக்காவின் பாதுகாப்பை நாடத் தொடங்கின.
அதேபோல ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்கினால், அது தனது இருப்புக்கே அச்சுறுத்தலாக விளங்கும் என்று அஞ்சிய இஸ்ரேல், ஈரானுக்கு எதிராக கடுமையான நிலையை எடுக்க தொடங்கியது. ஈரானின் அணு ஆயுத திட்டங்களைச் சீரழிக்க பல ஆண்டுகளாக இஸ்ரேல் கடுமையாக முயற்சித்து வருகிறது. இதற்கு முன்னர் பலமுறை ஈரானின் அணு கட்டமைப்புகளை இஸ்ரேல் நேரடியாகவும் தாக்கியுள்ளது.
இதன் காரணமாக இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேலுக்கு எதிராக உள்ள ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்புகளுக்கு ஈரான் நிதியுதவி வழங்கி வருகிறது. இதுவே இஸ்ரேல் - ஈரானுக்கு இடையே உள்ள பிரச்னைக்கு முக்கிய காரணமாக திகழ்ந்து வருகிறது. மேலும், இஸ்ரேலின் நெருங்கிய நட்பு நாடான அமெரிக்காவும் அணு ஆயுதத்தை ஈரான் உருவாக்க முயல்கிறது என்று கூறி அந்நாட்டின் மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்துள்ளது.
இதனிடையே கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் ஈரானின் அதி உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் எதிர்ப்பு எழுந்தது. தலைநகர் தெக்ரான் உள்ளிட்ட பல பகுதிகளில் அரசுக்கு எதிராக போராட்டம் நடந்த நிலையில், இந்த போராட்டத்தை ஈரான் அரசு கொடூரமாக ஒடுக்கியதாக விமர்சனம் எழுந்தது.
இதன் காரணமாக ஈரான் அரசுக்கு எச்சரிக்கை விடுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஈரானில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், ஈரானுக்கு எதிராக அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்களை அனுப்பி வைத்தார். இப்படி பல ஆண்டுகளாக தொடர்ந்த பிரச்னைகளோடு, புதிதாக வந்த பிரச்னையும் ஒன்று சேர்ந்ததே இந்த போருக்கு காரணமாக அமைந்துள்ளது.