எலான் மஸ்க்
எலான் மஸ்க் ட்விட்டர்
உலகம்

2024ல் 14 ஆயிரம் பேரை வீட்டுக்கு அனுப்பும் டெஸ்லா.. மெயில் அனுப்பிய எலான் மஸ்க்; கவலையில் ஊழியர்கள்!

Prakash J

டெஸ்லா மற்றும் எக்ஸ் தளத்தின் உரிமையாளராக இருப்பவர், எலான் மஸ்க். இவர், எக்ஸ் (ட்விட்டர்) தளத்தைக் கைப்பற்றியது முதல், பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்துவருகிறார். ஆட்குறைப்பு, பெயர் மாற்றம், கட்டண நிர்ணயம் உள்ளிட்ட பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். தற்போது அவருடைய டெஸ்லா நிறுவனத்தில் மீண்டும் பணி நீக்கம் பற்றிய செய்திகள் வெளியாகி உள்ளன.

மின்சார வாகனத் தேவையின் மந்தநிலை காரணமாக, 10% அதிகமான பணியாளர்களை மீண்டும் குறைக்கும் பணியில் டெஸ்லா நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இதுகுறித்து எலான் மஸ்க், தங்கள் நிறுவன ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில், ”நாங்கள் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு நிறுவனத்தை தயார்படுத்த இருக்கிறோம். இதனால் உற்பத்தியை அதிகரிக்கும் வண்ணம் அதிலிருக்கும் ஒவ்வொரு அம்சத்தையும் பார்க்க வேண்டியுள்ளது. அதில் செலவுக் குறைப்பும் முக்கியம். அந்த வகையில், முழுமையாக மதிப்பாய்வு செய்ததில் நிறுவனத்தில் பணிபுரியும் 10%க்கும் அதிகமான பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டிய கடினமான முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இதில் வெறுப்பதற்கு எதுவும் இல்லை. ஆனால், இது கட்டாயம் செய்யப்பட வேண்டும்” என அதில் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது, டெஸ்லா உள்ளிட்ட நிறுவனங்களில் உலக அளவில் பணிபுரியும் ஊழியர்களைக் கவலையடையச் செய்துள்ளது.

இதையும் படிக்க: மீண்டும் எழுந்த சிக்கல்! குழந்தைகளின் பிரபல இருமல் மருந்து.. 6 ஆப்ரிக்க நாடுகளில் விற்க தடை!

கடந்த 2023ஆம் ஆண்டு டெஸ்லா நிறுவனத்தின் ஊழியர்கள் எண்ணிக்கை 1,40,473 ஆக இருந்தது. ஆனால், இந்த எண்ணிக்கை கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அதன் மொத்த எண்ணிக்கையை இரட்டிப்பாக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. டெஸ்லா நிறுவனம் ஆஸ்டின் மற்றும் பெர்லினுக்கு வெளியே உள்ள இரண்டு ஆலைகளில் உற்பத்தியை அதிகரித்து வருகிறது. இந்தப் பணிநீக்கம் நிறுவனம் முழுவதுக்கும் பொருந்தும் என்றால், குறைந்தது 14,000 ஊழியர்கள் வெளியேற்றப்படுவார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, எலான் மஸ்க் தலைமையிலான டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தனது முதல் ஷோரூம்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் மின்சார கார்களுக்கான தேவையும் சந்தையும் விரிவடைந்து செல்வதை பயன்படுத்திக்கொள்ள எலான்மஸ்க் திட்டமிட்டுள்ளார். எலான் மஸ்க் பிரதமர் மோடியைச் சந்திக்கும் இந்திய சுற்றுப்பயணத்தின்போது இத்தகவல் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. மின்சார கார்கள் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா ஏற்கெனவே ஜெர்மனியில் உள்ள தனது ஆலையில் கார்களை உற்பத்தி செய்யத் தொடங்கியுள்ளது. இவை விரைவில் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் எனத் தெரிகிறது. கடந்த மாதம் மின்சார வாகன இறக்குமதி வரியை 100 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக இந்திய அரசு குறைத்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக டெல்லி மற்றும் மும்பையில் டெஸ்லாவின் கார் ஷோரும்கள் அமைய வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான இடங்களை, டெஸ்லா நிர்வாகிகள் கடந்த மார்ச் மாதம் தீவிரமாகத் தேடியதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: பாஜக எம்பியின் சர்ச்சை பேச்சு.. வேட்பாளரை மாற்றக்கோரி ராஜபுத்திர மக்கள் பேரணி.. ஸ்தம்பித்த குஜராத்!