hormuz web
உலகம்

ஒரு பக்கம் போர் நிறுத்த ஒப்பந்தம்.. மறுபக்கம் ஹார்முஸ் ஜலசந்தியில் மீண்டும் பதற்றம்! என்ன நடந்தது?

போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு பின் ஹார்முஸ் ஜலசந்தியில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், வர்த்தகக் கப்பல் தாக்குதலால் சர்வதேச கப்பல் போக்குவரத்து அச்சத்தில் உள்ளது.

PT WEB

ஹார்முஸ் ஜலசந்தியில் சிங்கப்பூர் கொடியுடன் சென்ற வர்த்தகக் கப்பலை ஈரான் புரட்சிகரப் படை ட்ரோன் மூலம் தாக்கியது. உயிர்ச்சேதம் ஏதுமில்லை என்றாலும், கப்பலின் கட்டுப்பாட்டு அறை சேதமடைந்தது. இதனால் சர்வதேச கப்பல் நிறுவனங்களில் அச்சம் அதிகரித்து, ஐநா கடல்சார் அமைப்பு மீட்புத் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தியது. ஈரான், தன் வழிகாட்டுதல்களை மீறும் கப்பல்களுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் இல்லை என எச்சரித்துள்ளது.

செய்தியாளர் - M. மீரா

பிப்ரவரி 28ஆம் தேதியன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல்களை நடத்தியதால் போர் தொடங்கியது. பின்பு ஏப்ரல் 8 அன்று போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட போதும் தாக்குதல்கள் தொடர்ந்தவாறே இருந்தது. இந்நிலையில் அமெரிக்கா-ஈரான் இடையிலான போரை நிரந்தரமாக நிறுத்தும் வகையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், ட்ரம்ப் மற்றும் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் மின்னணு முறையில் ஜூன் 17 அன்று கையெழுத்திட்டனர். இதனைத் தொடர்ந்து முதற்கட்டமாக சுவிட்சர்லாந்தில் ஜூன் 21 அன்று பேச்சுவார்த்தையும் நடைபெற்றது.

Trump & Masoud Pezeshkian

இதனைத் தொடர்ந்து எந்த ஒரு தாக்குதலும் நிகழாமல் இருந்தது . கடந்த சில நாட்களாக ஹார்முஸ் ஜலசந்தி வழியாக வணிகக் கப்பல்களின் போக்குவரத்து மீண்டும் மெதுவாகத் தொடங்க ஆரம்பித்திருந்தது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையும் குறையத் தொடங்கியது.

இந்நிலையில் வியாழக்கிழமையன்று, ஹார்முஸ் ஜலசந்தியில் சிங்கப்பூர் கொடியுடன் சென்ற ஒரு வர்த்தகக் கப்பலை ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படையினர் ட்ரோன் மூலம் தாக்கியதாக ஒரு அமெரிக்க அதிகாரி CBS செய்தி நிறுவனத்திடம் உறுதிப்படுத்தியிருந்தார்.

ஓமானின் தாஹித் கடற்கரைக்கு அப்பால், கப்பல் சென்றுக் கொண்டிருந்த போது தாக்கப்பட்டதில் கப்பலின் கட்டுப்பாட்டு அறை (Bridge) பலத்த சேதமடைந்தது. எனினும், அதிர்ஷ்டவசமாக கப்பல் ஊழியர்களுக்கு எந்தவித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை என்று பிரிட்டன் கடல்சார் வர்த்தக அமைப்பு (UKMTO) உறுதிப்படுத்தியது.

cargo ship

இந்தத் தாக்குதலுக்கு உள்ளான வர்த்தக கப்பல், ஐநா அமைப்பின் அதிகாரப்பூர்வ மீட்புப் பாதையைப் பயன்படுத்தாமல் ஓமன் நாட்டு எல்லைக்கு மிக அருகில் பயணித்ததே இந்த தாக்குதலுக்கு முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது.

IRGC யின் இந்த திடீர் ட்ரோன் தாக்குதல், சர்வதேச கப்பல் நிறுவனங்கள் மத்தியில் மீண்டும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஹார்முஸ் ஜலசந்தியில் பல மாதங்களாகச் சிக்கித் தவிக்கும் ஆயிரக்கணக்கான மாலுமிகள் மற்றும் நூற்றுக்கணக்கான வணிகக் கப்பல்களைப் பாதுகாப்பாக வெளியேற்றும் மீட்புத் திட்டத்தை (Evacuation Framework) ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச கடல்சார் அமைப்பு (IMO) தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.

கடல்சார் பாதுகாப்பு உத்தரவாதங்களை ஈரான் அரசிடமிருந்து மீண்டும் பெற்ற பின்னரே இந்த மீட்புப் பணிகள் தொடரும் என்றும் அதன் பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.

ஹார்முஸ் ஜலசந்தியின் முழுக் கட்டுப்பாட்டையும் தன்வசம் எடுக்க நினைக்கும் ஈரான் அதன் வழிகாட்டுதல்களைப் பின்பற்றாமல் செல்லும் எந்தவொரு கப்பலுக்கும் பாதுகாப்பு உத்தரவாதமோ அல்லது காப்பீட்டுப் பொறுப்போ வழங்க முடியாது என்று எச்சரித்துள்ளது. மேலும், இப்பாதையைக் கடக்கும் கப்பல்களுக்கு ‘சுங்கக் கட்டணம்’ (Toll fees) விதிக்கப் போவதாகவும் ஈரான் மிரட்டல் விடுத்து வருகிறது. இது சர்வதேச கடல்சார் சட்டங்களுக்கு எதிரானது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ மற்றும் அதிபர் டிரம்ப் நிர்வாகம் கடுமையாக எச்சரித்திருந்தனர்.

Qeshm Island, Iran

இதனைத் தொடர்ந்து ஈரானின் தாக்குதலுக்கு பதிலடியாக, வெள்ளிக்கிழமை அன்று அமெரிக்கா ஈரானின் ஏவுகணை , ஆளில்லா விமான சேமிப்பு வசதிகள் மற்றும் ரேடார் தளங்களை தாக்கியுள்ளது .இது ஈரானின் ஆபத்தான நடத்தைக்கு ஒரு சக்திவாய்ந்த பதிலடி என்றும் ஈரானியப் படைகளால் வர்த்தகக் கப்பல் போக்குவரத்திற்கு எதிராக நடத்தப்பட்ட இந்த நியாயமற்ற ஆக்கிரமிப்பு, போர் நிறுத்தத்தை அப்பட்டமாக மீறியுள்ளது என்றும் சென்ட்காம் (CENTCOM) கூறியுள்ளது.