சிரியா அதிபர் பஷார் அல் அசாத் மாஸ்கோவில் தஞ்சம் அடைந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
சிரியாவில் உள்நாட்டு போர் தீவிரமெடுத்துள்ள நிலையில், கிளர்ச்சி படையினர் தலைநகர் டமாஸ்கஸை கைப்பற்றி அதிபர் பஷார் அல் அசாத்துக்கு நெருக்கடி அளித்தனர். இதனைத் தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்த பஷர் அல் ஆசாத், குடும்பத்தினருடன் விமானத்தில் தப்பிச் சென்றார்.
அவர், பயணித்த விமானம் மாயமானதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அவர் தனது நெருங்கிய நட்பு நாடான ரஷ்யாவில் இருப்பது தெரியவந்துள்ளது. பஷார் அல் அசாத் மற்றும் அவரது குடும்பத்திற்கு மனிதாபிமான அடிப்படையில் புகலிடம் அளித்துள்ளதாக ரஷ்யா கூறியுள்ளது. சிரியாவில் மக்கள் வன்முறையை கைவிடுவதுடன், பிரச்சினையை அரசியல் ரீதியில் தீர்க்க வேண்டுமென ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும் சிரியா விவகாரத்தில் தலையிடப் போவதில்லை எனவும் ரஷ்யா கூறியுள்ளது. சிரியா விவகாரத்தில் நிலைமையை கட்டுப்படுத்த கூட்டாளிகளுடன் இணைந்து அமெரிக்கா பணியாற்றும் என ஜோ பைடன் கூறியுள்ளார்.
மேலும் அவர், “சிரியாவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் வரை அமெரிக்கா உதவிக்கரம் நீட்டும். கிளர்ச்சியாளர்களின் கருத்துகள் மற்றும் செயல்பாடுகள் மதிப்பீடு செய்யப்படும்.
சிரியாவில் நடக்கும் விவகாரங்களுக்கு அதிபர் பஷார் அல் அசாத் பொறுப்பேற்க வேண்டும். இதுவரை அவருக்கு அளித்து வந்த ஆதரவை ரஷ்யா, ஈரான், ஹிஸ்புல்லா அமைப்பினர் திரும்ப பெற்றதே இந்த நிலைக்கு காரணம். நீண்ட காலமாக அவதியடைந்து வந்த சிரியா மக்கள், தங்களது வளமான எதிர்காலத்தை உருவாக்க இதுவே சரியான நேரம். அதற்கு அமெரிக்கா துணை நிற்கும்.மத்திய சிரியாவில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சியாளர்களின் நிலைகள் மற்றும் முகாம்களை குறிவைத்து அமெரிக்க படைகள் தாக்குதலை மேற்கொண்டது” என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சிரியா விவகாரத்தில் அமெரிக்கா தலையிடக் கூடாது என பைடன் அரசுக்கு டொனால்ட் ட்ரம்ப்
அறிவுறுத்தியுள்ளார்.
அதன்படி, அமெரிக்காவின் அதிபராக பதவியேற்க விருக்கும் ட்ரம்ப் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதளப் பதிவில், “உக்ரைனை ஆக்கிரமித்துள்ள ரஷ்யாவால் சிரியா மோதலை நிறுத்த
முடியாது. பஷார் அல் ஆசாத்தை இதுவரை ரஷ்யா ஆதரித்து வந்த நிலையில், தற்போது கைவிட்டுவிட்டது.
உக்ரைனில் போர் நிறுத்தத்தை உடனடியாக கொண்டு வர வேண்டும். ரஷ்ய அதிபர் புடின் செயல்பட வேண்டிய நேரம் இது. உக்ரைன் விவகாரத்தில் சீனா உதவலாம். ஆனால் சிரியாவின் உள்நாட்டு விவகாரத்தில் அமெரிக்கா தலையிடாமல் இருப்பது நல்லது” எனக் குறிப்பிட்டுள்ளார்.