சீனாவின் ஷாங்காய் ஆராய்ச்சியாளர்கள் 'ஸ்டெம் செல்' (Stem Cell) தொழில்நுட்பம் மூலம் நீரிழிவு நோயைக் குணப்படுத்துவதில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளனர்.
மனிதர்களுக்கு சரி செய்யமுடியாத நோய்களில் ஒன்று நீரிழிவு நோய். நீரிழிவு என்பது இரத்த சர்க்கரை (குளுக்கோஸ்) அளவு கட்டுப்பாடில்லாமல் அதிகரிக்கும் ஒரு மருத்துவ நிலை ஆகும். இந்த நோய்க்கு பல காரணங்கள் இருக்கலாம். இருப்பினும், நீரிழிவு நோய் வந்தவுடன், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த மருந்து, மாத்திரைகளை அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும். உணவு மற்றும் தினசரி வழக்கத்திலும் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். தற்போது, இந்த நோய் வந்த ஒருவருக்கு அவர்களின் நோயின் வீரியத்தை கணக்கிட்டு மருத்துவர்கள் மருந்து (இன்சுலின்) வழங்குகிறார்கள். இது தற்காலிக தீர்வுதானே தவிர நிரந்தரத் தீர்வு கிடையாது. மனிதர்களின் உடலில் கணையம் என்ற ஒரு பகுதி இருக்கும். இதில்தான் மனிதன் உட்கொள்ளும் உணவிற்கு ஏற்ப இன்சுலினானது சுரக்கும்.
இப்படி சுரக்கும் இன்சுலின் நாம் உட்கொள்ளும் உணவில் கலந்து, அதிலிருந்து தேவையான சர்க்கரையை எடுத்து இரத்தத்துடன் கலக்கும் வேலையை செய்கிறது. கணையமானது சரிவர வேலை செய்யவில்லை என்றால் இன்சுலின் சுரப்பதில் பாதிப்பு ஏற்படும். அப்போது ஊசி மூலமாகவோ அல்லது மாத்திரையின் மூலமாகவோ தேவையான அளவு இன்சுலின் உடலில் செலுத்தப்பட்டு தற்காலிகமாக நீரிழிவு நோயை கட்டுக்குள் கொண்டு வருவர். இன்று நீரிழிவு நோயாளிகளுக்கு இன்சுலின் ஒரு முக்கியமான மருந்தாக உள்ளது. இந்த நிலையில், சீனாவின் ஷாங்காய் ஆராய்ச்சியாளர்கள் 'ஸ்டெம் செல்' (Stem Cell) தொழில்நுட்பம் மூலம் நீரிழிவு நோயைக் குணப்படுத்துவதில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளனர். இந்தப் புதிய முறையில், நோயாளியின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட செல்கள் மூலம் கணையத்தில் மீண்டும் இன்சுலினை சுரக்கச் செய்து சாதனை படைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிகிச்சையைப் பெற்ற நோயாளிக்கு, தற்போது இன்சுலின் ஊசி அல்லது மருந்துகள் தேவைப்படவில்லை என ஆய்வுகள் கூறுகின்றன. வகை-2 நீரிழிவு நோய்க்கு இது ஒரு நிரந்தரத் தீர்வாக அமையும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், மருத்துவ உலகில் இது மிகப்பெரிய புரட்சியாகப் பார்க்கப்படுகிறது. எனினும் இந்த முயற்சி ஆரம்பகட்டத்தில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.