இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக, இந்தியாவுக்கு மூன்று நாள்கள் அரசு முறை பயணமாக கடந்த வாரம் வந்திருந்தார். இது, அவருக்கு முதல் வெளிநாட்டுப் பயணம். இந்தியா வந்த அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் மோடியைச் சந்தித்து திசநாயக பேசினார். பிரதமர் நரேந்திர மோடியுடன் அவர், மீனவர் விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து இருதரப்பு உறவு குறித்து இருவரும் உரையாடினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்தப் பயணம் இரு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்த வழிவகுத்தது. 2 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை, பொருளாதார நெருக்கடியைச் சந்தித்தது. அதிலிருந்து மீள்வதற்கு இந்தியா எங்களுக்கு பெரிதும் ஆதரவளித்தது. இருநாடுகளுக்கும் பாதிப்பாக மாறியுள்ள மீனவர் பிரச்னைக்கு நீடித்த மற்றும் நிலையான தீர்வைக் காண விரும்புகிறோம்” எனத் தெரிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, “இருநாட்டு உறவின் வளர்ச்சியில் இந்தியா ஒத்துழைக்கும். மீனவர்கள் பிரச்னையை மனிதாபிமானம் முறையில் அணுக ஒப்புக்கொள்ளப்பட்டது. மீனவர்கள் பிரச்னைக்கு நீடித்த மற்றும் நிலையான தீர்வை காண விரும்புகிறோம். புதிய இலங்கை அரசு இலங்கையில் உள்ள தமிழர்களின் விருப்பங்களை நிறைவேற்றும் என்ற நம்பிக்கை உள்ளது” எனத் தெரிவித்தார்.
இந்த நிலையில், இந்திய பயணத்திற்குப் பிறகு தாயகம் திரும்பிய அதிபர் அநுர குமார திசநாயக, அடுத்தாண்டு ஜனவரியின் நடுப்பகுதியில் சீனாவுக்கு அரசுமுறைப் பயணமாக செல்லவிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. சீன முதலீடுகள் இலங்கையில் அதிகளவில் உள்ள நிலையில், இலங்கை - சீனா அதிபர்களிடையேயான பேச்சுவார்த்தை சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.