இலங்கை அதிபர் - இந்திய பிரதமர் சந்திப்பு: தமிழக மீனவர்கள் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை!
இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக, இந்தியாவுக்கு மூன்று நாள்கள் அரசு முறை பயணமாக வந்துள்ளார். இது, அவருக்கு முதல் வெளிநாட்டுப் பயணம். இந்தியா வந்த அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் மோடியைச் சந்தித்து திசநாயக பேசினார்.
பிரதமர் நரேந்திர மோடியுடன் அவர், மீனவர் விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து இருதரப்பு உறவு குறித்து இருவரும் உரையாடினர். இதுகுறித்துப் பேசிய திசநாயக, “இருநாடுகளுக்கும் பாதிப்பாக மாறியுள்ள மீனவர் பிரச்னைக்கு நீடித்த மற்றும் நிலையான தீர்வைக் காண விரும்புகிறோம். குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள மீனவர்கள் ஆழ்கடலில் இருக்கும் மீன்களைப் பிடிக்கும் முறையைப் பின்பற்றுகிறார்கள். அது, மீன்பிடித் தொழிலுக்கு அழிவை ஏற்படுத்தும் என்பதால் அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, ”இருநாட்டு உறவின் வளர்ச்சியில் இந்தியா ஒத்துழைக்கும். மீனவர்கள் பிரச்னையை மனிதாபிமானம் முறையில் அணுக ஒப்புக்கொள்ளப்பட்டது. மீனவர்கள் பிரச்னைக்கு நீடித்த மற்றும் நிலையான தீர்வை காண விரும்புகிறோம். புதிய இலங்கை அரசு இலங்கையில் உள்ள தமிழர்களின் விருப்பங்களை நிறைவேற்றும் என்ற நம்பிக்கை உள்ளது” எனத் தெரிவித்தார்.
இந்த நிலையில், இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக மற்றும் பிரதமர் மோடியின் சந்திப்புக்குப் பிறகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு முக்கிய கோரிக்கையை வைத்துள்ளார். அதில் அவர், “இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிப்பது குறித்தும் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை திருப்பி அனுப்புவது குறித்தும் இந்த சந்திப்புக்கு பின் இலங்கை பரிசீலிக்க வேண்டும். இதுபோன்ற பேச்சுவார்த்தையின் மூலம் நம்பிக்கையை ஊட்டுவதுடன், நமது இரு நாடுகளுக்கும் இடையே வலுவான உறவுகள் மற்றும் இணக்கமான எதிர்காலத்தை வளர்ப்பதற்கான ஆக்கபூர்வமான படியைத் தரும்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக இதே கோரிக்கையை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.