வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் மகளான சாயிமா வாஸத் , உலக சுகாதார அமைப்பின் (WHO) தென்கிழக்கு ஆசியப் பிராந்தியத் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார். அதேநேரத்தில் சாயிமாவின் ராஜினாமாவைத் தொடர்ந்து, தென்கிழக்கு ஆசியப் பிராந்தியத்திற்கான தற்காலிகப் பொறுப்பாளரை நியமிக்கவும், புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான நடைமுறைகளை மேற்கொள்ளவும் உலக சுகாதார அமைப்பு ஆயத்தமாகி வருகிறது.
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் மகளான சாயிமா வாஸத், கடந்த 2023-ஆம் ஆண்டு நவம்பரில் நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்று, 2024 பிப்ரவரி மாதம் WHO தென்கிழக்கு ஆசியப் பிராந்திய இயக்குநராகப் பொறுப்பேற்றார். இதற்கிடையே, வங்கதேசத்தில், 2024ஆம் ஆண்டு அரசுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டத்தின்போது, அப்போதைய பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்தார். இதையடுத்து அவரது ஆட்சி முடிவுக்கு வந்தது. அப்போது, வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. அவ்வரசு, போராட்டம் தொடர்பாக ஹசீனா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பல குற்றச்சாட்டுகளும் சட்ட நடவடிக்கைகளும் தொடங்கின. இதன் விளைவாக, சர்வதேச அமைப்பான WHO-வில் சாயிமா வாஸத் தனது பொறுப்பில் தொடர்வதற்குப் பல தரப்பிலிருந்தும் அழுத்தங்கள் அதிகரித்தன.
பின்னர் நடைபெற்ற பொதுத் தேர்தலில், பின்.என்.பி. கூட்டணி அமோக வெற்றிபெற்று அரியணையைப் பிடித்தது. அக்கட்சியின் தலைவர் தாரிக் ரஹ்மான் புதிய பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டார்.
இந்த நிலையில்தான், சாயிமா வாஸத் , உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசியப் பிராந்தியத் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார். முன்னதாக, உலக சுகாதார அமைப்பு கடந்த ஆண்டு அவரை, இறுதியில் ஊதியமில்லா நிர்வாக விடுப்பில் அனுப்பியது. ஹசீனாவிற்குப் பதிலாக அமைந்த இடைக்கால அரசாங்கத்தின் கீழ், வங்கதேசத்தின் ஊழல் எதிர்ப்பு ஆணையம் அந்த ஆண்டு மார்ச் மாதம் அவர் மீது மோசடி மற்றும் போலி ஆவணம் தயாரித்ததாகக் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ததைத் தொடர்ந்து, அவர் முதன்முதலில் 2025-ஆம் ஆண்டு ஜூலை மாதம் விடுப்பில் அனுப்பப்பட்டார்.
எனினும், அவர் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்திருந்தார். அதேநேரத்தில் சாயிமாவின் ராஜினாமாவைத் தொடர்ந்து, தென்கிழக்கு ஆசியப் பிராந்தியத்திற்கான தற்காலிகப் பொறுப்பாளரை நியமிக்கவும், புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான நடைமுறைகளை மேற்கொள்ளவும் உலக சுகாதார அமைப்பு ஆயத்தமாகி வருகிறது. உலக சுகாதார அமைப்பு ஜனவரியில் புதிய தேர்தல்களை நடத்த இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.