sheikh hasina PTI
உலகம்

2 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறை.. பொதுவெளியில் தோன்றும் ஷேக் ஹசீனா.. எதிர்பார்ப்பில் வங்கதேசம்!

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, முதன்முறையாக இந்தியாவில் நடைபெறும் ஒரு பொது நிகழ்ச்சியில் பங்கேற்று, வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா உரையாற்றவுள்ளார்.

Prakash J

அண்டை நாடான வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக கடந்த 2024-ஆம் ஆண்டு மாணவர் அமைப்பினர், பொதுமக்கள் இணைந்து நடத்திய புரட்சி மிகப்பெரிய வன்முறையாக வெடித்தது. இதன் காரணமாக பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இதையடுத்து வங்கதேசத்தில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, ராணுவத்தின் கண்காணிப்பில் அங்கு முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, இந்தாண்டு பிப்ரவரியில் நடைபெற்ற பொதுத் தேர்தலில், பின்.என்.பி. கூட்டணி அமோக வெற்றிபெற்று அரியணையைப் பிடித்தது. அக்கட்சியின் தலைவர் தாரிக் ரஹ்மான் புதிய பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டார்.

sheikh hasina

அதேநேரத்தில், 2024ஆம் ஆண்டு அரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் 1,400 பேர் கொல்லப்பட்டிருந்தனர். 22 ஆயிரம் பேர் காயமடைந்திருந்தனர். இதுகுறித்து தொடரப்பட்ட வழக்கில் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குற்றவாளி என தீர்ப்பளித்த சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம், அவருக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டதுடன், ஹசீனாவின் செயல் மனித குலத்திற்கே எதிரானது எனவும் தீர்ப்பில் கூறப்பட்டது. இதையடுத்து, அவரை வங்கதேசத்திற்கு நாடு கடத்த வேண்டும் எனவும் அந்நாட்டு அரசு இந்தியாவிடம் வலியுறுத்தி வருகிறது.

இந்த நிலையில், முதன்முறையாக இந்தியாவில் நடைபெறும் ஒரு பொது நிகழ்ச்சியில் பங்கேற்று, ஷேக் ஹசீனா உரையாற்றவுள்ளார். புதுடெல்லியில் நாளை மறுநாள், (ஆகஸ்ட் 5) மாலை 6:00 மணி முதல் 7:30 மணி வரை நடைபெறவுள்ள இந்நிகழ்வை, தெற்காசிய வெளியுறவுச் செய்தியாளர்கள் அமைப்பு ஒருங்கிணைத்து நடத்துகிறது. அவர், இந்தியாவில் தஞ்சம் புகுந்து சரியாக 2 ஆண்டுகள் நிறைவடையும் நாளில் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது. மேலும், இந்தியாவில் தஞ்சமடைந்த கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் பொது நிகழ்ச்சிகளையோ, ஊடகச் சந்திப்புகளையோ முற்றிலுமாகத் தவிர்த்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

sheikh hasina

காணொளி மூலம் பங்கேற்று உரையாற்றும் அவரது இந்நிகழ்ச்சி சமூக வலைதளங்களிலும் நேரலை செய்யப்பட உள்ளது. தனது எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் மற்றும் வங்கதேசத்திற்கு மீண்டும் திரும்புவது குறித்த தனது திட்டங்கள் பற்றி ஷேக் ஹசீனா பேச இருப்பதாகத் தகவல் வெளியாக உள்ளது. அவருடன் முக்கிய நபர்கள் சிலரும் கலந்துகொள்ள இருப்பதாகதவும் கூறப்படுகிறது. மேலும், இந்த நிகழ்வு, பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, அவர் வரும் டிசம்பர் மாதத்திற்குள் தான் மீண்டும் வங்கதேசம் திரும்ப திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்திருந்தார்.