அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானின் தலைநகர் தெக்ரான் மீது தாக்குதல் நடத்தியதில், ஈரானின் தலைமை தலைவர் கமேனி கொல்லப்பட்டார். இந்த தாக்குதலுக்கு பின்னால் சவூதி அரேபியா இருப்பதாக வாஷிங்டன் போஸ்ட் தகவல் வெளியிட்டுள்ளது. சவுதி இளவரசர் முகமது பின் சல்மான், ட்ரம்ப்புடன் ரகசியமாக பேசி, ஈரானின் அணுசக்தி திட்டங்களை தகர்க்க வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
செய்தியாளர் - பிரவீன் ஜோஷ்வா
ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே கடந்த சில வாரங்களாக தொடர்ந்து போர் பதற்றம் நிலவி வந்தது. அமெரிக்கா தனது இரண்டு முக்கிய விமானம் தாங்கி கப்பல்களை ஈரானுக்கு அருகே கொண்டுவந்து நிறுத்தியது நிலைமையில் தீவிரத்தை அதிகரித்தது.
இதனால் எப்போது வேண்டுமானாலும் போர் ஏற்படலாம் என்ற அச்சம் நிலவிய நிலையில், இஸ்ரேல் அமெரிக்காவின் உதவியோடு ஈரானின் தலைநகர் தெக்ரான் உள்ளிட்ட பகுதிகள் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரானின் அதிஉயர் தலைவர் கமேனி கொல்லப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் இந்த தாக்குதலுக்கு பின்னால் சவூதி அரேபியா உள்ளதாக அமெரிக்காவின் முன்னணி செய்தி நிறுவனமாக வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த நிறுவனம் வெளியிட்ட செய்தியில், சவுதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மான், கடந்த ஒரு மாதமாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்புடன் பலமுறை தொலைபேசியில் ரகசியமாகப் பேசியுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்த உரையாடல்களின் போது, ஈரானின் அணுசக்தி மற்றும் ஏவுகணைத் திட்டங்களை ராணுவ ரீதியாகத் தகர்க்க வேண்டியது அவசியம் என்று அவர் ட்ரம்ப்பை வலியுறுத்தியதாக கூறப்பட்டுள்ளது. அதே போல இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மற்றும் சவுதி இளவரசர் ஆகிய இருவரின் தொடர் வறுபுறுத்தலே , அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனியைக் குறிவைத்துத் தாக்க உத்தரவிடக் காரணம் என்றும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
சவூதி அரேபியா தனது வான்வெளியை ஈரான் மீதான தாக்குதலுக்குப் பயன்படுத்த விடமாட்டோம் என்று இரண்டு வாரங்களுக்கு முன்னர் கூறியிருந்தது. இந்த சூழலில் இந்த செய்தி வெளியானதன் மூலம் சவுதி அரேபியா இரட்டை வேடம் போடுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.