ஹவுதியின் தொடர் தாக்குதல்களால் நிலைகுலைந்திருக்கும் சவூதிக்கு அதன் நட்பு நாடுகள் உதவி செய்யாததால்,சவூதி அதிரடி முடிவு ஒன்றை எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது... சவூதியின் இந்த முடிவால் பாதிக்கப்படப்போகும் நாடு எது..பின்னணியில் இருக்கும் காரணம் என்ன விரிவாக பார்க்கலாம்...
மத்திய கிழக்கில் நடைபெறும் போரைவிட, தற்போது ஹவுதி - சவூதி இடையே ஏற்படும் தாக்குதலே உலக ளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே ஹவுதி அமைப்பினர், ஏமனின் செங்கடல் பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க மோகா (Mocha) துறைமுக நகரத்தையும், பாப் அல்-மண்டேப் நீரிணையை ஒட்டியுள்ள துபாப் (Dhubab) நகரத்தையும் கைப்பற்றி இருந்தனர்.
இதனால் ஹவுதியின் கை ஓங்கியிருக்கும் நிலையில், அவர்கள் தொடர்ந்து சவூதி மீது தாக்குதலை நடத்தி வருகின்றனர். அதிலும், சவூதியின் புனித தலமான மெக்கா மீது ஹவுதி ஏவுகணைகளை வீசியதாகவும், அதை தாங்கள் தடுத்து அழித்ததாகவும் சவூதி குற்றஞ்சாட்டியுள்ளது.
’2017-இல் மெக்கா நகரை நோக்கி ஒரு பாலிஸ்டிக் ஏவுகணை ஏவப்பட்ட பிறகு, தற்போது ஹவுதிகளால் இரண்டாவது முறை ஏவப்பட்டுள்ளது’ என அது தெரிவித்துள்ளது.
ஆனால், இந்தக் கூற்றை முற்றிலும் மறுத்துள்ள ஹவுதி, அமெரிக்காவின் ராணுவத் தளங்களையே இலக்கு வைப்பதாகத் தெரிவித்துள்ளது. சவூதிக்கு எதிராக ஹவுதிகளின் அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மத்திய கிழக்கில் பதற்றம் நிலவுகிறது.
அத்துடன், சவூதிக்கு உதவுவதாக, மெக்கா ஒப்பந்தத்தில் இணைந்த துருக்கியும், பாகிஸ்தானும் இதிலிருந்து விலகியிருப்பது சவூதிக்கு மேலும் அச்சத்தை உருவாக்கியுள்ளது. அதேபோல், அமெரிக்காவும் ‘இந்தப் போர் தேவையற்றது’ என ஒதுங்கிக் கொண்டுள்ளது.
இதனால், சவூதி மிகுந்த குழப்பத்திலும், பெரிய அச்சத்திலும் இருப்பதாகக் கூறப்படுகிறது. இப்படி எல்லோரும் ஒரே நேரத்தில் சவூதியைக் கைவிட்ட நிலையில், அது தற்போது புதிய முடிவை எடுத்துள்ளது. ராணுவ நடவடிக்கை மூலம் ஹவுதிகளை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாது என்பதை உணர்ந்த சவூதி, ஹவுதிகளுடன் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடத் தொடங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சவூதியின் 'Vision 2030' பொருளாதாரத் திட்டங்கள் காரணமாக, அது தற்போது மோதல்களைத் தவிர்த்து பிராந்திய அமைதியை ஏற்படுத்துவதில் கவனம் செலுத்த முற்படுவதால் இத்தகைய நடவடிக்கையை எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது