இந்தியா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கி வந்த நிலையில், உள்நாட்டு தேவையை கருத்தில்கொண்டு பிற நாடுகளுக்கு பெட்ரோல் ஏற்றுமதியை தற்காலிகமாக நிறுத்துவதாக ரஷ்யா அதிரடியாக அறிவித்துள்ளது. ரஷ்யாவின் இந்த அறிவிப்பு இந்திய எரிபொருள் சந்தையில் புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர்: விக்னேஷ்
மத்திய கிழக்குப் பகுதியில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகள் மற்றும் ஈரான் இடையிலான மோதல் பல வாரங்களைக் கடந்தும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தப் போர் நிலைமை வான் - நிலப்பரப்பில் மட்டுமல்லாமல் கடல் போக்குவரத்திலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலக வர்த்தகத்திற்கு மிக முக்கியமான கடல் பாதையாக விளங்கும் ஹார்மூஸ் நீரிணைப் பகுதியில் ஈரான் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த நீரிணை வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களுக்கு முன்கூட்டியே அனுமதி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், இந்தியாவில் தேவையான அளவு எரிபொருள் இருப்பு இருப்பதாக மத்திய அரசு தொடர்ந்து உறுதி அளித்து வருகிறது.
இந்நிலையில், ரஷ்யா வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு உலக சந்தையில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர் காரணமாக, உள்நாட்டில் எரிபொருள் விநியோகத்தைச் சீராக வைத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக ரஷ்யா விளக்கம் அளித்துள்ளது.
இதன் அடிப்படையில், வருகிற ஏப்ரல் 1 முதல் பிற நாடுகளுக்கு பெட்ரோல் ஏற்றுமதி தற்காலிகமாக நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு, உள்நாட்டில் எரிபொருள் விநியோகத்திற்கு முன்னுரிமை வழங்கவும், அந்நாட்டில் பெட்ரோல் விலையைக் கட்டுப்படுத்தவும் உதவும் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு, ரஷ்ய துணைப் பிரதமர் அலெக்சாண்ட நோவாக் தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர் வெளியிடப்படுள்ளது.
இந்தத் தடை கச்சா எண்ணெய்க்கான ஏற்றுமதி அல்ல, சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோல் ஏற்றுமதிக்கானது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ரஷ்யாவின் எண்ணெய் ஏற்றுமதி அதிகமாக இந்தியா, சீன, துருக்கி, சிங்கப்பூர் மற்றும் சில ஆப்பிரிக்க நாடுகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இந்நாடுகள் ரஷ்யாவின் முக்கிய எரிசக்தி வாடிக்கையாளர்களாக உள்ளன. இந்தியா ரஷ்யாவின் மிகப் பெரிய எண்ணெய் கூட்டாளி என்பதையும் கவனிக்க வேண்டும். இந்நிலையில் ரஷ்யாவின் இந்த அறிவிப்பு இந்தியா உள்ளிட்ட நட்பு நாடுகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே மத்திய கிழக்குப் போரின் காரணமாக உலகளாவிய எண்ணெய் மற்றும் பெட்ரோலிய பொருட்களின் விலைகளில் ஏற்ற இறக்கங்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்த புதிய முடிவு சர்வதேச சந்தையில் மேலும் தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளதாக பொருளாதார நிபுணர்கள் மதிப்பிட்டு வருகின்றனர்.