கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிவேகமாக பனிப்பாறைகள் உருகிக்கொண்டிருப்பதாக யுனெஸ்கோ வெளியிட்டுள்ள அறிக்கையில் அதிர்ச்சித்தகவல் வெளியாகி உள்ளது.
இதன் விளைவுகள் உலகம் முழுவதும் எதிரொலிக்கும் என்று விஞ்ஞானிகள் அச்சம் தெரிவிக்கிறார்கள்.
கடந்த 13 ஆம்தேதி ஜெனிவாவில் நடந்த கூட்டத்தில் பனிப்பாறைகள் குறித்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதன் விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளன. இதன்படி, 1975 ஆம் ஆண்டிலிருந்து 9 ஆயிரம் GIGA TONNE அளவுக்கான பனிப்பாறைகளை இழந்துள்ளதாக உலக பனிப்பாறைகள் கண்காணிப்பு அமைப்பின் இயக்குநர் மைக்கேல் ஸெம்ப் தெரிவித்துள்ளார்.
பனிப்பாறைகள் உருகுவதன் காரணமாக கடல் மட்டம் அதிவேகமாக உயரும் என்றும் இதன் விளைவாக பலகோடி பேர் வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய அபாயம் உள்ளதாகவும் ஸெம்ப் தெரிவித்தார்.
பனிப்பாறைகள் உருகுவதால், கடல் மட்டம் 25 மில்லிமீட்டர் அளவுக்கு உயரும் என்றும் ஒவ்வொரு மில்லிமீட்டர் கடல்மட்டம் உயர்வு என்பது கூடுதலாக 3 லட்சம் பேரை வெள்ள பாதிப்புக்குள்ளாக்கும் என்றும் ஸெம்ப் அச்சம் தெரிவிக்கிறார். அன்டார்ட்டிக் மற்றும் கிரீன்லாந்து உட்பட உலகம் முழுவதும் தற்போது 2 லட்சத்து 75 ஆயிரம் பனிப்பரப்புகள் மட்டுமே இருப்பதாக உலக வானிலைஆய்வியல் அமைப்பு இயக்குநர் Stefan Uhlenbrook தெரிவிக்கிறார். பனிப்பாறைகளை பாதுகாப்பது என்பது உலக சுற்றுச்சூழலை பாதுகாப்பதாகும் என்றும் அவர் வலியுறுத்துகிறார்.