Pakistan in Middle East issue ISPR/Facebook
உலகம்

டிரம்ப்–ஈரான் மோதலில் புதிய திருப்பம்! அதிரடியாக களமிறங்கியது பாகிஸ்தான்!

அமெரிக்கா மற்றும் ஈரான் மீண்டும் பேச்சுவார்த்தை தளத்துக்கு திரும்புவதற்காக தங்களால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

PT WEB

செய்தியாளர் : ஐடா அருட்செல்வி

அமெரிக்கா மற்றும் ஈரான் மீண்டும் பேச்சுவார்த்தை தளத்துக்கு திரும்புவதற்காக தங்களால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் கையெழுத்தான இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அந்நாட்டு அரசு கூறியுள்ளது.

Pakistan in Middle East issue

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தாஹிர் ஆண்ட்ராபி, வாராந்திர செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவித்தார். குறிப்பாக, உலகின் முக்கிய கடல் வர்த்தகப் பாதையான ஹார்முஸ் நீரிணை பகுதியில் நிலவும் பதற்றத்தை தணிப்பதே இந்த முயற்சிகளின் முக்கிய நோக்கமாகும் என்றார்.

பதற்றத்தை குறைப்பதற்கான சிறந்த வழி பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர அணுகுமுறையே என்றும், போர் நிறுத்தம் நீடிப்பதற்கும் அமெரிக்கா–ஈரான் இடையேயான உரையாடல் மீண்டும் தொடங்குவதற்குமான அனைத்து முயற்சிகளையும் பாகிஸ்தான் வரவேற்பதாகவும் அவர் கூறினார்.

Pakistan in Middle East issue

மேலும், ஜூன் 22ஆம் தேதி வெளியிடப்பட்ட பாகிஸ்தான்–கத்தார் கூட்டறிக்கை மற்றும் இஸ்லாமாபாத் ஒப்பந்தத்தின் அடிப்படையில், இரு நாடுகளுக்கும் இடையேயான கருத்து வேறுபாடுகளை களைந்து, பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கு பாகிஸ்தான் முழு அளவில் முயற்சி மேற்கொண்டு வருவதாக ஆண்ட்ராபி தெரிவித்தார்.

மேற்கு ஆசியாவின் பாதுகாப்பு சூழல் இன்னும் கவலைக்கிடமாக இருப்பதாகவும், அண்மைய நாட்களில் நிலவிய அமைதியான சூழல் நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தாலும், தற்போதைய நிலைமை மீண்டும் பதற்றத்தை அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Pakistan in Middle East issue

அமெரிக்காவும் ஈரானும் அதிகபட்ச கட்டுப்பாட்டுடன் செயல்பட்டு, இஸ்லாமாபாத் ஒப்பந்தத்தின்படி தொழில்நுட்ப மட்ட பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க வேண்டும் என்றும் பாகிஸ்தான் வலியுறுத்தியுள்ளது. ஏப்ரலில் இரு நாடுகளும் போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொண்டு பின்னர் இஸ்லாமாபாத் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நிலையில், சமீபத்திய மோதல்கள் அந்த ஒப்பந்தத்தின் எதிர்காலம் குறித்த புதிய கேள்விகளை எழுப்பியுள்ளதாக பார்க்கப்படுகிறது.