பாகிஸ்தான், சவூதி, துருக்கி இணைந்த மெக்கா ஒப்பந்தம் மூலம் தெற்காசியாவைச் சுற்றிவளைக்கும் ராணுவ கூட்டணி உருவாகியுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா மீண்டும் ஆபரேஷன் சிந்தூர் போன்ற நடவடிக்கை எடுத்தால், அதை துருக்கி, சவூதி தமக்கெதிரான தாக்குதலாகக் கருதலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். வங்கதேசமும் இந்த கூட்டணியில் இணைந்தால், இந்தியாவின் மூலோபாய நிலைமை மேலும் சிக்கலாகும் என கூறப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பாகிஸ்தான் மற்றும் சவூதி அரேபியா நாடுகள் இணைந்து ஒரு கூட்டு ராணுவ பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இது தெற்காசிய பிராந்தியத்தின் வலிமையான ராணுவ கூட்டணியாக கருதப்பட்டது.
இந்த சூழலில் இந்த கூட்டணியில் துருக்கியும் இணைந்து இந்த மூன்று நாடுகளும் மெக்கா ஒப்பந்தம் எனப்படும் ராணுவ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தில் ஒரு நாட்டின் மீதான தாக்குதல் மற்ற நாடுகள் மீதான தாக்குதலாக கருதப்படும் என்று நேட்டோ பாணியிலான அம்சமும் இடம்பெற்றுள்ளது.
பாகிஸ்தானின் அணு ஆயுத திறன், சவூதியின் பணபலம், துருக்கியின் தொழில்நுட்பம் என இந்த கூட்டணி நேட்டோ கூட்டணிக்கு பிறகு உலகின் இரண்டாவது பெரிய ராணுவ கூட்டணியாக உருவெடுத்துள்ளது. பாகிஸ்தானுடன் நடந்த ஆபரேஷன் சிந்தூர் மோதலின்போது அந்நாட்டுக்கு துருக்கி ஏராளமான உதவிகளை செய்தது. எனவே இந்தியாவின் அருகில் இப்படி ஒரு ராணுவ கூட்டணி அமைவது இந்தியாவுக்கு அச்சறுத்தலாக பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், இந்த கூட்டணியில் இந்தியாவின் எல்லை நாடான வங்கதேசத்தையும் இணைக்க பாகிஸ்தான் முயற்சித்து வருவதாக வெளியான தகவல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து பேசிய வங்கதேச பிரதமர் தாரிக் ரஹ்மானின் நெருங்கிய உதவியாளரான ஹுமாயூன் கபீர்(Humayun Kabir) , சவூதிஅரேபியா, பாகிஸ்தான், துருக்கி ஆகிய நாடுகளை உள்ளடக்கிய பொருளாதார அல்லது பாதுகாப்புக் கூட்டணியில் வங்கதேசம் இணைவதற்கான வாய்ப்புகள் வந்ததாகவும், அதில் இணைய வங்கதேசம் ஆர்வமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
எதிர்காலத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக 'ஆபரேஷன் சிந்தூர்' போன்ற ராணுவ நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டால், அதைத் தங்களுக்கு எதிரான நடவடிக்கையாக துருக்கியும் சவூதி அரேபியாவும் கருதக்கூடும். இதில் வங்கதேசமும் இணைந்தால், அது இந்தியாவின் நலன்களுக்கு எதிராக முடியும் என பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.