100 அடி உயரத்தில் ராட்சத சூறாவளி.. தூக்கி வீசப்படும் வீடுகள், மரங்கள்! மிரண்டு ஓடிய மக்கள்!
பிரான்ஸ் தென்மேற்கில் உள்ள போமாஸ் கிராமத்தில் ஆகஸ்ட் 24 அன்று 100 அடி உயரம் வரை எழுந்த ராட்சத சூறாவளி வீடுகளின் கூரைகளை தூக்கி வீசி, மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்தது. நிறைமாத கர்ப்பிணி உட்பட 41 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பல வீடுகள் சேதமடைந்ததால் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
செய்தியாளர் - கார்த்திகேயன்
கடல்களில் உருவாகும் குறைந்த காற்றழுத்த மையத்தை சுற்றி அதிவேகமாக சழலும் பலத்த காற்று தான் சூறாவளியாக மாறுகிறது. இது உருவாக மனிதர்கள் நேரடியான காரணமில்லை என்றாலும், பல்வேறு மறைமுக காரணங்கள் உள்ளன. குறிப்பாக, தொழிற்சாலைகள், வாகனங்கள், நிலக்கரி பயன்பாடுகள் போன்றவற்றால், கார்பன் டை ஆக்சைடு வாயு வெளியாகி, புவியின் வெப்பநிலையை உயர்த்துகிறது.
இது சூறாவளி உருவாகுவதற்கான முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இதுமட்டுமின்றி, மனிதர்களால் கடல் நீர் வேகமாக வெப்பமடைவது, பனிப்பாறைகள் உருகுவதால் கடல் நீர் மட்டம் உயர்வது, கடலோரப் பகுதிகளில் உள்ள அலையாத்தி காடுகள் மற்றும் மரங்களை அழித்தல் போன்ற காரணங்களாலும், ராட்சத சூறாவளிகள் ஏற்படுகின்றன. இயற்கைக்கு மனிதன் செய்யும் துரோகத்தின் எதிர்விணையாக தான் சூறாவளி போன்ற பேரிடர்கள் ஏற்பட்டு, மனிதனை வாட்டி வதை்து வருகின்றன.
இப்படியான சூழலில், ஃபிரான்ஸ் நாட்டையும் இயற்கையின் கோர கரங்கள் கடுமையாக தண்டித்துள்ளது. அதாவது, ஃபிரான்ஸ் நாட்டின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ளது போமாஸ் ( Pomas ) என்ற கிராமம். 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரும் இந்த கிராமத்தில், கடந்த ஆகஸ்டு 24-ஆம் தேதி அன்று, மிகப்பெரிய சூறாவளி ஏற்பட்டுள்ளது.
கிட்டதட்ட 100 அடி உயரத்திற்கு எழுந்த இந்த ராட்சத சூறாவளி காற்றால், அருகில் இருந்த வீடுகளின் கூரை தூக்கி வீசப்பட்டதோடு, மிகப்பெரிய மரங்களும் வோரோடு வேராக பிடுங்கி எரியப்பட்டன. இந்த இயற்கை பேரிடரால், நிறைமாத கர்ப்பிணி உட்பட 41 பேர் படுகாயங்கள் அடைந்துள்ள நிலையில், அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், ஏராளமான வீடுகளின் கூரைகள் கடும் சேதமடைந்திருப்பதால், பலரும் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
120-க்கும் மேற்பட்டோர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு, கட்டிட இடிபாடுகளில் சிக்கியோரை மீட்டும், முறிந்து விழுந்த மரங்களை அப்புறப்படுத்தியும் வருகின்றனர். இதற்கிடையே, போமாஸ் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை, சூறாவளி புரட்டி எடுத்தது தொடர்பான வீடியோக்கள், சமூக வலைதளங்களில் வெளியாகி, பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

