அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் மோதலுக்குப் பிறகு, ட்ரம்ப் மற்றும் மசூத் பெசெஷ்கியன் மின்னணு ஒப்பந்தம் கையெழுத்திட்டதன் பின்னணியில், ஜெருசலேமின் ஹீப்ரு பல்கலைக்கழக ஆய்வு பெரும் அதிர்ச்சியை வெளிப்படுத்துகிறது. 3,644 பேரில் 92%-க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் போரில் ஈரான் வென்றதாக நம்புகின்றனர்; இஸ்ரேலின் நீண்டகால பாதுகாப்பு பலவீனமடைந்ததாகவும் கருதுகின்றனர்.
செய்தியாளர்; M. மீரா
பிப்ரவரி 28ஆம் தேதியன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல்களை நடத்தியதன் மூலம் இந்தப் போர் தொடங்கியது. ஏப்ரல் 8 அன்று போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட போதும் தாக்குதல்கள் தொடர்ந்தவாறே இருந்தது. இந்நிலையில் அமெரிக்கா-ஈரான் இடையிலான போரை நிரந்தரமாக நிறுத்தும் வகையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் மின்னணு முறையில் ஜூன் 17 அன்று கையெழுத்திட்டனர். இதனைத் தொடர்ந்து சுவிட்சர்லாந்தில் ஜூன் 21 அன்று முதற்கட்டமாக பேச்சுவார்த்தையும் நடைபெற்றது.
இந்நிலையில் ஹிஸ்புல்லாவுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகள் மற்றும் ஈரானின் திறன்கள் பலவீனப்படுத்தப்பட்டதாக கூறப்பட்டாலும் 100 நாட்களைக் கடந்து நடைபெற்ற அமெரிக்க - இஸ்ரேல் - ஈரான் மோதலில் ஈரான் வெற்றி பெற்றுள்ளதாக 92%-க்கும் அதிகமான இஸ்ரேலியர்கள் கருதுவதாக ஜெருசலேமின் ஹீப்ரு பல்கலைக்கழகத்தின் சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
ஜூன் 17 மற்றும் 20-க்கு இடையில் ஜெருசலேமின் ஹீப்ரு பல்கலைக்கழகம் நடத்திய புதிய கணக்கெடுப்பில் 92 சதவீதத்திற்கும் அதிகமானோர் - (அவர்கள் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான வலதுசாரி ஆட்சியை ஆதரிப்பவர்கள்) ஈரான் போரில் வெற்றி பெற்றதாகக் கருதுகின்றனர். இந்த கணக்கெடுப்பில் மொத்தம் 3,644 பேர் பதிலளித்தனர்.
இவர்களில் சுமார் 82.9 சதவீதத்தினர், ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் நடவடிக்கைகள் அந்நாட்டின் நீண்டகாலப் பாதுகாப்பை பலவீனப்படுத்தியுள்ளதாகக் கருதுகின்றனர். மேலும், அந்த ஆய்வின்படி, இஸ்ரேல் நடத்திய இந்தத் தாக்குதலுக்கான நோக்கங்களை அடைய இஸ்ரேல் தவறிவிட்டதாகவும் அவற்றில் சிலவற்றை மட்டுமே பெற்றதாகவும் 87.8 சதவீத இஸ்ரேலியர்கள் கருதுகின்றனர்.
இஸ்ரேல் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்றுள்ளது என்ற நெதன்யாகுவின் கருத்தை 72.5 சதவீதத்தினர் ஏற்கவில்லை. மேலும், 56.4 சதவீதத்தினர் நெதன்யாகுவின் செயல்பாட்டை மோசம் அல்லது தோல்வி என்று மதிப்பிட்டுள்ளனர். வெறும் 26.5 சதவீதத்தினர் மட்டுமே நெதன்யாகுவின் நிர்வாகத்தை நல்லது அல்லது சிறப்பானது என்று கருதுகின்றனர்; அதேவேளையில், 17.1 சதவீதத்தினர் மட்டுமே அவரது செயல்பாடு பரவாயில்லை என்று கருதியுள்ளனர்.
நெதன்யாகு மட்டுமல்லாமல், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குறித்தும் இந்தக் கருத்துக்கணிப்பு மதிப்பீடு செய்துள்ளது. இதில், 69.1 சதவீதத்தினர் போரை அவர் கையாண்ட விதத்தை தோல்வி அல்லது மோசம் என்று கூறியுள்ளனர். மாறாக, 10.8 சதவீதத்தினர் மட்டுமே அவரது செயல்பாட்டை நல்லது/ சிறப்பானது என்று கருதியுள்ளனர்.
லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா இலக்குகள் மீதான தனது ராணுவ நடவடிக்கையை இஸ்ரேல் தொடர வேண்டும் என்று 48.2 சதவீதத்தினர் கருதுகின்றனர். அதேவேளையில், 20.9 சதவீதத்தினர் மட்டுமே லெபனான் மீதான தாக்குதல்களுக்கு எதிராகக் கருத்து தெரிவித்துள்ளனர்.
அக்டோபர் 7, 2023 அன்று நடந்த தாக்குதலுக்குப் பிறகு, காஸா, ஹமாஸ், ஹிஸ்புல்லா அல்லது ஈரான் தொடர்பான விவகாரங்களில் இஸ்ரேல் தனது பெரும்பாலான நோக்கங்களை அடைந்துவிட்டதாக 12.2 சதவீதத்தினர் மட்டுமே நம்புகின்றனர்.
61.3 சதவீதத்தினர் இஸ்ரேல் தனது இலக்குகளை எந்த வகையிலும் அடையவில்லை என்று நம்புகின்றனர். அதே சமயம் 26.5 சதவீதத்தினர் அந்நாடு சில வெற்றிகளைப் பெற்றுள்ளது என்று கருதுகின்றனர்.