தென்னாப்பிரிக்காவில் இருந்து கடந்த சில மாதங்களில் மட்டும் சுமார் 1 லட்சத்து 78 ஆயிரம் அகதிகள் வெளியேறியிருப்பது சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது. இவர்களில் பெரும்பாலானோர், அந்நாட்டு அரசின் நடவடிக்கைகளால் தங்களது சொந்த நாடுகளுக்கு திரும்பியுள்ளனர். அதேநேரத்தில், சுமார் 19 ஆயிரம் பேர் அதிகாரப்பூர்வமாக நாடு கடத்தப்பட்டுள்ளதாக தென்னாப்பிரிக்க அரசு தெரிவித்துள்ளது. இவ்வளவு பெரிய எண்ணிக்கையினான மக்கள் திடீரென தென்னாப்பிரிக்காவை விட்டு வெளியேறுவது ஏன்? பார்க்கலாம்.
தென்னாப்பிரிக்காவில் சமீப காலமாக சட்டவிரோத குடியேற்றத்திற்கு எதிரான போராட்டங்களும், வெளிநாட்டினருக்கு எதிரான வன்முறை சம்பவங்களும் அதிகரித்துள்ளன. வேலைவாய்ப்புகள் குறைந்து வருவது, அரசின் பொது சேவைகள் மீது அதிகரிக்கும் அழுத்தம், குற்றச்செயல்கள் போன்றவற்றுக்கு வெளிநாட்டவர்கள்தான் காரணம் என்று சில போராட்டக் குழுக்கள் குற்றம்சாட்டி வருகின்றன. குறிப்பாக, முன்னாள் வானொலி தொகுப்பாளரால் ஆரம்பிக்கப்பட்ட மார்ச் அண்ட் மார்ச் (March and March) உள்ளிட்ட குடியேற்ற எதிர்ப்பு இயக்கங்கள், ஆவணங்கள் இல்லாமல் நாட்டில் வசிக்கும் வெளிநாட்டவர்கள் வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.
இதன் உச்சகட்டமாக, கடந்த ஜூன் 30-ம் தேதியை நாட்டில் சட்டவிரோதமாகத் தங்கியுள்ள குடியேறிகள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான "கெடு" நாள் இது என்று அக்குழுக்கள் தெரிவித்து நாடு தழுவிய ஆர்ப்பாட்டங்களை இந்தக்குழுக்கள் நடத்தின. இந்தப்போராட்டம் சில பகுதிகளில் வன்முறையாக மாறியது. இந்தச்சூழலில் தான், தாக்குதல் அச்சம் காரணமாக மே மாத பிற்பகுதியில் இருந்து ஜிம்பாப்வே நாட்டைச் சேர்ந்த சுமார் 1 லட்சத்து 15 ஆயிரம் பேரும், மலாவியைச் சேர்ந்த சுமார் 56 ஆயிரம் பேரும், நைஜீரியா, கானா, மொசாம்பிக் மற்றும் லெசோதோ ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா 1,000-க்கும் மேற்பட்டோரும் என 1 லட்சத்து 78 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தென்னாப்பிர்க்காவை விட்டு வெளியேறி தங்கள் நாடுகளுக்குச் சென்றுள்ளதாக அசோசியேட் பிரஸ் (AP) செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த வாரம், 19 ஆயிரம் பேர் அதிகாரப்பூர்வமாக நாடு கடத்தப்பட்டிருப்பதாக தென்னாப்பிரிக்கா அரசு தெரிவித்திருந்த நிலையில், தற்போது இந்த செய்தி வெளியாகியிருக்கிறது. இந்த வெளியேற்றத்தால், புலம்பெயர்ந்தவர்களின் குழந்தைகள் பள்ளிப் படிப்பை தொடர முடியாத நிலையும், HIV நோயாளிகளுக்கு தேவையான சிகிச்சை கிடைப்பதில் சிக்கலும் ஏற்பட்டுள்ளதாக மனிதாபிமான அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன. ஒருபுறம், சட்டவிரோத குடியேற்றத்தை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் இருப்பதாக தென்னாப்பிரிக்க அரசு கூறுகிறது. மறுபுறம், வேலையின்மை மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு புலம்பெயர்ந்தவர்களை மட்டுமே குற்றம்சாட்டுவது சரியா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இந்த மாதத் தொடக்கத்தில், மொராக்கோவில் இருந்து 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கடல் வழியாக ஸ்பெயினின் சியூட்டா எல்லைக்குள் அகதிகளாக நுழைய முயன்ற சம்பவம் சர்வதேச அளவில் கவனம் பெற்றிருந்த நிலையில், தற்போது ஆப்பிரிக்க கண்டத்திற்குள்ளேயே அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் தொடர்பான நெருக்கடி தீவிரமடைந்து வருவது கவலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.