ஹார்முஸ் நீரிணை முடக்கம்.. எண்ணெய் ஏற்றுமதி 75% சரிவு.. ஈராக் கவலை!
மத்திய கிழக்குப் போரால் ஹார்முஸ் நீரிணை முடங்கியதால், உலகின் 20% கச்சா எண்ணெய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் நேரடி விளைவாக ஈராக்கின் எண்ணெய் உற்பத்தி தினசரி 34 லட்சம் பேரலிலிருந்து 27 லட்சமாக குறைந்து, ஏற்றுமதி 15–17 லட்சம் பேரலுக்கு சரிந்தது. ஈரான் உடன் பேச்சுவார்த்தை தொடரும் நிலையில், துருக்கி மற்றும் அகபா துறைமுகம் வழியாக மாற்று ஏற்றுமதி திட்டங்கள் தீவிரப்படுத்தப்படுகின்றன.
கடந்த பிப்ரவரி 28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் தொடங்கிய போர் 5 மாதங்களைக் கடந்தும் முடிவுக்கு வராமல் நீடித்து வருகிறது. இப்போரின் காரணமாக உலகின் 20 சதவீத கச்சா எண்ணெய் வர்த்தகம் நடக்கும் ஹார்முஸ் நீரிணை ஏற்கனவே முடங்கியிருக்கும் நிலையில், உலகளாவிய எண்ணெய் விநியோகமும், சர்வதேச வர்த்தகமும் கடுமையாக பாதிக்கப்பட்டன
இந்தச்சூழலில் தான், ஹார்முஸ் முடக்கம் காரணமாக ஈராக்கின் எண்ணெய் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு எண்ணெய் துறை அமைச்சர் பாசிம் முகமது குதைர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசியுள்ள அவர், போருக்கு முன்பாக ஈராக் நாளொன்றுக்கு சுமார் 34 லட்சம் பேரல் கச்சா எண்ணெயை உற்பத்தி செய்து வந்தது. ஆனால் தற்போது, 27 லட்சம் பேரல்களாக உற்பத்தி குறைந்துள்ளது. அதில், 15 லட்சம் முதல் 17 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் மட்டுமே ஏற்றுமதி செய்யப்படுகிறது எனத் தெரிவித்திருக்கிறார்.
தொடர்ந்து, ஈராக்கின் எண்ணெய் ஏற்றுமதியை ஹார்முஸ் நீரிணை வழியாக மேற்கொள்ள அனுமதிப்பது தொடர்பாக ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் ஆனால், இதுவரை எந்தவொரு இறுதி ஒப்பந்தமும் நடைமுறைக்கு வரவில்லை எனவும் கூறியிருக்கிறார்.
இதற்கிடையில், ஹார்முஸ் வழித்தடத்தை சார்ந்திருப்பதை குறைக்கும் வகையில், ஈராக் மாற்று ஏற்றுமதி வழிகளையும் உருவாக்கி வருகிறது. குறிப்பாக, துருக்கி வழியாக எண்ணெய் ஏற்றுமதியை அதிகரிப்பது மற்றும் அகபா துறைமுகம் வழியாக ஏற்றுமதி செய்வது தொடர்பான திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம், அந்நாட்டின் எண்ணெய் ஏற்றுமதியை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

