ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டுக்கு செல்ல விசா வாங்குவார்கள்... ஆனால் ஒரு நாட்டின் மக்களில் மூன்றில் ஒரு பங்கினர் ஒரே நேரத்தில் வெளிநாட்டுக்கு விசா கேட்கும் புதுமை தற்போது நடந்துள்ளது, இதன் பின்னால் பெரும் சோகமும் கவலையும் புதைந்துள்ளது. ஆஸ்திரேலியா அருகிள்ள உலக வரைபடத்தில் புள்ளி போன்று தெரியக்கூடிய துவாலு என்ற தீவு இன்னும் 25 ஆண்டுகளில் கடலுக்குள் முழுமையும் மூழ்கிவிடும் என கூறப்படுகிறது. ஏற்கனவே சில சின்னஞ்சிறு தீவுகளை கடல் மூழ்கடித்துவிட்டது, இதனால் அங்குள்ள மக்கள் ஆஸ்திரேலியாவிற்கு நிரந்தரமாக குடிபெயர்வதற்காக விசா கோரி விண்ணப்பித்துள்ளனர்.
இத்தீவில் 11 ஆயிரம் பேர் மட்டுமே உள்ள நிலையில் இதில் 4 ஆயிரம் பேர் ஆஸ்திரேலியாவிடம் விசா கோரியுள்ளனர். இது போன்றவர்களுக்கு கிளைமேட் விசா என்ற பெயரில் சிறப்பு விசா வழங்கி ஆஸ்திரேலியா அரவணைப்பது மட்டுமல்ல அவர்களுக்கு வேலைவாய்ப்பு, கல்வி, மருத்துவம் போன்ற வசதிகளையும் செய்து தருவதாக கூறியுள்ளது. பருவ நிலை மாற்றத்தின் விளைவுகளில் ஒன்றான கடல் நீர் மட்ட உயர்வு பிரச்சினை அடுத்து இந்தியா, வங்கதேசம், நெதர்லாந்து போன்ற மேலும் பல நாடுகளை பாதிக்கும் என்பதும் அதிர்ச்சி தரும் செய்தி.