Model image googel gemeni
உலகம்

முதல் Sketch கப்பல்.. தொட்டதால் கெட்ட ரஷ்யா.. நசுக்கத் தொடங்கும் நார்வே!

ரஷ்யாவுக்குச் சொந்தமான சுற்றுலா கப்பல் ஒன்றை நார்வே அதிகாரிகள் பறிமுதல் செய்திருப்பது அதிர்ச்சியையும் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Prakash J

நேட்டோ நாடுகளில் இணையக்கூடாது என்பதற்காக உக்ரைன் மீது ரஷ்யா, கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் போர் தொடுத்தது. அது இன்றுவரை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கடந்த 2014-இல் கிரிமியாவை ரஷ்யா ஆக்கிரமித்தபோது, உக்ரைனின் அரசுக்குச் சொந்தமான 'நாஃப்டோகாஸ்' (Naftogaz) எரிசக்தி நிறுவனத்தின் சொத்துக்களைக் கைப்பற்றியது. இதை எதிர்த்து ஐரோப்பிய நாடான நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் (The Hague) நாஃப்டோகாஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கில், 4.22 பில்லியன் டாலர் இழப்பீடு வழங்க வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் ரஷ்யாவுக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால், ரஷ்யா இந்த தொகையைச் செலுத்த மறுத்தது. இந்த நிலையில்தான் ரஷ்யாவின் வணிகச் சொத்துக்களை முடக்கும் முயற்சியில் எரிசக்தி நிறுவனம் களமிறங்கியது.

அதன் ஒரு பகுதியாக, ரஷ்ய அரசுக்குச் சொந்தமான 'ப்ரொஃபசர் மோல்ச்சானோவ்' (Professor Molchanov) என்ற ஆராய்ச்சி மற்றும் சுற்றுலா கப்பலை நார்வே அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இக்கப்பல் நார்வேயின் ஆர்க்டிக் பகுதியான ஸ்வால்பார்ட்டில் (Svalbard)உள்ள 'பரன்ட்ஸ்பர்க்' பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது. எனினும், கப்பலில் இருந்த பயணிகள் மற்றும் ஆராய்ச்சிப் பணியாளர்களுக்குப் பாதிப்பில்லை என்றும், அவர்கள் பாதுகாப்பாக நாடு திரும்ப உதவப்படும் என்றும் நார்வே அரசு தெரிவித்துள்ளது. இக்கப்பல் பறிமுதல் செய்யப்பட்டதை ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் ’கடற்கொள்ளை’ என்றும் ’சட்டவிரோத நடவடிக்கை’ என்றும் கடுமையாகச் சாடியுள்ளது. ரஷ்ய அரசு இத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாகவும், சர்வதேச சட்டங்களின்படி கப்பலை மீட்க சட்டப் போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளது.