கிம் ஜாங் உன் கோப்புப்படம்
உலகம்

எதிர்ப்பை மீறி அமெரிக்காவுக்கு குறி.. ட்ரம்புக்கு அதிர்ச்சி கொடுத்த வடகொரியா.. தயாரான புது ஏவுகணை!

அமெரிக்காவை தாக்கும் திறனுடைய அதிக உந்துவிசை கொண்ட அதி நவீன திட எரிபொருள் ஏவுகணை இன்ஜினை வடகொரியா வெற்றிகரமாக சோதனை செய்து பார்த்திருக்கிறது.

Prakash J

அமெரிக்காவையே தாக்கும் திறனுடைய ஏவுகணைக்கான இன்ஜின் சோதனையை வடகொரியா மேற்கொண்டதாக அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அடிக்கடி ஏவுகணை சோதனைகளில் ஈடுபட்டு வரும் கொரிய நாடுகளில் வடகொரியா முன்னிலையில் உள்ளது. உலக நாடுகளின் எதிர்ப்பை மீறியும் வடகொரியா இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதால் அந்நாட்டுக்கு பல்வேறு நாடுகள் மற்றும் அமைப்புகளால் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. என்றாலும் அதிலிருந்து பின்வாங்காமல் தொடர்ந்து ஏவுகணை சோதனையில் ஈடுபட்டு வருகிறது. வடகொரியா இந்த அளவிற்கு ஏவுகணைச் சோதனைகளில் ஈடுபடுவதற்கு மிக முக்கியமான காரணமே, தென்கொரிய நாடானது அமெரிக்காவுடன் இணைந்து போர் பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதுதான். இதனால், தங்களது நாட்டிற்கு எதிராக ஆத்திரமூட்டும் செயல்களை அமெரிக்கா செய்துவருவதாக வடகொரியா குற்றம்சாட்டி வருகிறது.

வட கொரியா

இந்த நிலையில், அமெரிக்காவையே தாக்கும் திறனுடைய ஏவுகணைக்கான இன்ஜின் சோதனையை வடகொரியா மேற்கொண்டதாக அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதுதொடர்பாக வடகொரிய மத்திய செய்தி முகமை (KCNA), “கலப்பு கரியமில இழை பொருள்களால் தயாரிக்கப்பட்ட இன்ஜினின் தரைவழி சோதனையை வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் பார்வையிட்டார். அமெரிக்காவைத் தாக்கும் திறன்கொண்ட ஏவுகணையில் பயன்படுத்தப்படும் இந்த இன்ஜின் 2,500 கிலோ டன் விசைத் திறனுடையது. கடந்த செப்டம்பர் மாதம் 1,970 கிலோ டன் விசைத்திறனுடைய திட எரிபொருள் என்ஜின் சோதனைக்குட்படுத்தப்பட்டது. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நாட்டில் உள்ள அணு ஆயுதங்கள், பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் பிற ஆயுதங்களின் துல்லியத் திறனை மேம்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தச் சோதனை நடத்தப்பட்டது” எனத் தெரிவித்துள்ளது.

கிம் ஜாங் உன்

இந்தக் குறிப்பானது, அமெரிக்காவின் பிரதான நிலப்பரப்பைத் தாக்கும் அணு ஆயுதத் திறன் கொண்ட, கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணைகளைக் குறிப்பதாகப் புரிந்துகொள்ளப்படுகிறது. ஆனால், இந்தப் பரிசோதனை எப்போது, ​​எங்கு நடைபெற்றது என்பதை கே.சி.என்.ஏ. துல்லியமாகத் தெரிவிக்கவில்லை.

சமீபத்திய ஆண்டுகளில், வட கொரியா, அமெரிக்காவின் பிரதான நிலப்பரப்பைத் தாக்கும் வகையில் பல்வேறு கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை (ICBMs) சோதனை செய்து வருகிறது. அந்த வகையில், தற்போது அதன் போர்க்குண்டுகள் வளிமண்டல மறுநுழைவின் கடுமையான நிலைமைகளைத் தாங்குவதை உறுதி செய்வது போன்ற தொழில்நுட்பத் தடைகளை வட கொரியா இன்னும் எதிர்கொள்கிறது என்று சில வெளிநாட்டு வல்லுநர்கள் கூறுகின்றனர்.

கிம் ஜாங் உன்

2019-இல் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புடன் கிம் மேற்கொண்ட முக்கியத்துவம் வாய்ந்த ராஜதந்திரப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததிலிருந்து, வட கொரியா தனது அணு ஆயுதக் களஞ்சியத்தை விரிவுபடுத்துவதில் அக்கறை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, நாடாளுமன்றத்தில் உரையாற்றிய வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், "அமெரிக்கா ஒரு பயங்கரவாத நாடு. அமெரிக்காவின் ராணுவ கொள்கைகளே உலகின் அமைதியைச் சீர்குலைக்கின்றன. தனது இறையாண்மையைப் பாதுகாக்கும் பொருட்டு வடகொரியா அணு ஆயுதங்களைக் கைவிடாது. நாட்டின் பாதுகாப்பிற்கு அணுசக்தி திறன் மிகவும் இன்றியமையாதது” என அவர் தெரிவித்திருந்தார்.