ஏமனைச் சேர்ந்த தலால் அபு மஹதி என்பவரைக் கொலை செய்த குற்றச்சாட்டில், கேரளாவைச் சேர்ந்த இந்திய செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு, அந்நாட்டு அரசு மரண தண்டனை நிறைவேற்ற உத்தரவிட்டிருந்தது. இந்த மரண தண்டனையை தடுக்க இந்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் அனைத்தும் தோல்வியடைந்த நிலையில், நேற்று (ஜூலை 16) அந்த தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது. எனினும் அதற்கு முன்பாக, கேரளாவைச் சேர்ந்த செல்வாக்குமிக்க சன்னி முஸ்லிம் தலைவர் காந்தபுரம் ஏபி அபூபக்கர் முஸ்லியாரின் உத்தரவின் பேரில், ஏமனின் பிரபல அறிஞரும், சூஃபி முஸ்லிம் தலைவருமான ஷேக் ஹபீப் உமா் பின் ஹபீஸ், தலால் அபு மஹதி குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதையடுத்து, நிமிஷாவின் தண்டனை தற்காலிமாக ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. மேலும், நிமிஷா தரப்பினா் வழங்கும் இழப்பீடு பணத்தை மஹதி குடும்பத்தினா் ஏற்றுக்கொள்வது தொடா்பான இறுதி முடிவை எட்டுவதில் கவனம் செலுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், தலால் அபு மஹதி சகோதரர் அப்தெல்ஃபத்தா மஹதி, '’நிமிஷா தரப்பின் இழப்பீடு பணத்தை ஏற்கப் போவதில்லை” எனத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், ”மரண தண்டனை நிறைவேற்றுவதை நிறுத்தியவர்கள் எவ்விதத்தில் சமரசத்துக்கு முன்வந்தாலும் அதனை முற்றிலும் நாங்கள் நிராகரிப்போம். மரண தண்டனை நிறைவேற்றுவதற்காகக் காத்திருப்போம். அழுத்தம் கொடுப்பதால் முடிவு மாறாது. நாங்கள் பணத்தை அதிகம் விரும்புவதாக நிமிஷா குடும்பத்தினர் ஊடகத்திடம் கூறி வருகின்றனர்” எனப் பதிவிட்டிருந்தார்.
இது, நிமிஷாவைக் காப்பற்றும் முயற்சியில் பின்னடைவாக கருதப்படுகிறது. நிமிஷா பிரியாவுக்கு மன்னிப்பு வழங்கக்கூடியது பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர்தான். இருப்பினும், குடும்பத்தில் கருத்து வேறுபாடு எழுந்துள்ளதால், பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள மதவாதிகள், அதிகாரிகள் தவிர, பிரச்னையைத் தீர்க்க தங்களால் இயன்ற அனைத்தையும் செய்து வருகின்றனர்.
இதன் அடுத்தகட்டமாக இரத்தப் பணம் குறித்து பேசப்படும் எனத் தெரிகிறது. 'இரத்தப் பணம்' என்பது மன்னிப்புக்கு ஈடாக கொல்லப்பட்ட நபரின் குடும்பத்திற்கு பண இழப்பீடு தருவது ஆகும். இது அந்நாட்டில் ஷரியா சட்டத்தின்கீழ் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு நடைமுறையாகும். இதற்கான பணத்தை, கேரள கோடீஸ்வரர் எம்.ஏ. யூசுப் அலி வழங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, ”நீதியைவிட பணத்தில் அதிக ஆர்வம் காட்டுவதாக ஊடக அறிக்கைகள் காட்டியதை அடுத்து மஹதியின் சகோதரர் கோபமடைந்துள்ளார்” என கேரள செவிலியரை வீட்டிற்கு அழைத்து வரப் போராடும் ஏமனில் உள்ள சமூகச் சேவகர் சாமுவேல் ஜெரோம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் NDTVக்கு அளித்துள்ள பேட்டியில், ”மஹதியின் குடும்பத்திற்கு 'இரத்தப் பணம்' வடிவில் 1 மில்லியன் டாலர் வழங்கப்படும் என்றும், பின்னர் அவர்கள் பிரியாவை மன்னித்து, அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நீக்குவார்கள் என்றும் இந்தியாவிலிருந்து வந்த தகவல்கள் தெரிவித்தன. இந்தியாவில் மக்கள் 'இரத்தப் பணம்' பேச்சுவார்த்தை இருப்பதாகச் சொல்லி வருகிறார்கள். நான் உங்களுக்கு ஒரு விஷயத்தைச் சொல்கிறேன், அந்த வார்த்தையே மிகவும் தவறு. நான் இரண்டு முறை மஹதியின் சகோதரரையும் ஒருமுறை தந்தையையும் சந்தித்துள்ளேன். அது வெறும் கருணைக்காக மன்றாடுவதுதான். அப்படியிருக்கையில், அவர்களிடம் போய் எவ்வளவு தொகையைப் பெற்றுக் கொள்வீர்கள் என்று கேட்க முடியாது. அது முற்றிலும் தவறானது.
இது வருத்தமளிக்கிறது. இந்தியாவில், மக்கள் அதைப் பற்றி எப்படி நினைக்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. துரதிர்ஷ்டவசமாக, ஊடகங்களில் வந்த அனைத்து விஷயங்களால், மஹதியின் சகோதரர் அதில் ஆர்வம் இல்லை எனப் பதிவிட்டார். இதனால் நமக்கு ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் அவர்கள் எல்லோரும் மிகக் கோபமாக உள்ளனர். பேச்சுவார்த்தையில் சுமுகம் ஏற்பட வேண்டும். எனவே இப்போது நாம் மீண்டும் அதற்கான பாலங்களை கட்ட வேண்டும். அதேநேரத்தில், நமக்கு எவ்வளவு நேரம் இருக்கிறது என்று தெரியவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.