நேபாளத்தில் சர்மா ஓலி அரசுக்கு எதிரான மக்களின் அதிருப்தி, சமூக ஊடகங்கள் மீதான தடை இணைந்து இளைஞர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஆங்காங்கே நடந்து வந்த சிறுசிறு போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் பெரும் வன்முறையாக மாறியது. நிலைமை எல்லைமீறி சென்றதால், பிரதமர் சர்மா ஒலி மற்றும் அமைச்சர்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, தலைமறைவாகினர். வன்முறையை கட்டுப்படுத்த அதிகாரத்தை கையில் எடுத்துள்ள ராணுவம், பல்வேறு இடங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், நாட்டில் நிலவும் கடினமான சூழ்நிலையை கட்டுக்குள் கொண்டுவரவும், ஜனநாயகத்தை பாதுகாக்கவும், அமைதியை நிலைநாட்டவும் எல்லா முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அதிபர் ராம்சந்திரா பவுடல் தெரிவித்துள்ளார். அத்துடன், போராட்டக்காரர்களின் கோரிக்கைகளை நிவர்த்தி செய்ய முயல்வதாகவும், விரைவில் அனைத்தும் சரி செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
பிரதமர் சர்மா ஒலி பதவி விலகிய நிலையில், இடைக்கால அரசை அமைக்க ஜென் Z போராட்டக் குழுவினர் ஆலோசித்து வருகின்றனர். முன்னாள் தலைமை நீதிபதி சுசிலா கார்கிக்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு கிடைத்திருப்பதால், அவரிடம் பொறுப்பை அளிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. அதேசமயம், நேபாளத்தில் பல்வேறு இடங்களிலும் தடையை மீறி போராட்டங்களும் அரங்கேறி வருகின்றன. சில பகுதிகளில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளதால், அதனை கட்டுப்படுத்தும் முயற்சியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.