மியான்மர் நிலநடுக்கம் ராய்ட்டர்ஸ்
உலகம்

மியான்மர் நிலநடுக்கம் | கட்டடங்களில் சிக்கிய உயிர்கள்.. பிரதமர் மோடியின் பயணம் ரத்து?

நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பதால் பிரதமர் மோடியின் தாய்லாந்து பயணம் (அடுத்த வாரம்) ரத்தாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Prakash J

மியான்மரில் இன்று நண்பகலில் (12.50 மணி) அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தரையில் இருந்து 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.7 மற்றும் 6.4 ஆக பதிவாகியுள்ளன. சாகைங் நகரிலிருந்து வடமேற்கே 16 கிமீ தொலைவில் 10 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக கட்டடங்கள் பயங்கரமாகக் குலுங்கின. இதனால் மக்கள் வீடுகளில் இருந்து அலறியடித்தபடி வெளியே ஓடி வந்தனர். நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள் கட்டடங்களுக்குள் இருந்து அச்சத்துடன் வெளியேறும் காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. அந்த வகையில், வானுயர்ந்த கட்டடம் ஒன்று இடிந்து தரைமட்டமாகும் வீடியோவும், மிக உயர்ந்த கட்டடத்தின் மேல் தளத்தில் அமைக்கப்பட்டிருந்த நீச்சல் குளத்தில் இருந்த நீர், நிலநடுக்கத்தின்போது குலுங்கி வெளியே கொட்டும் வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மியான்மரின் மண்டலேயில் உள்ள 90 ஆண்டுகள் பழமையான அவா பாலமும், சாகைங் அருகே மையமாக இருந்த மிகப்பெரிய நிலநடுக்கத்தின் காரணமாக இராவதி ஆற்றில் இடிந்து விழுந்துள்ளன.

மேலும், மியான்மரில் உள்ள இருந்த மசூதி இடிந்து விழுந்ததில் மூன்று பேர் பலியாகினர். ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். அதுபோல், பாங்காக்கில் கட்டப்பட்டு வந்த உயரமான கட்டடம் இடிந்து விழுந்ததில் 2 தொழிலாளர்கள் பலியாகினர். இந்த விபத்தில் 40 பேர் சிக்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனால், இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

மேலும், மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கமானது தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிலும் கடுமையாக உணரப்பட்டது. மேலும் இந்த நிலநடுக்கம் இந்தியாவின் மேற்கு வங்க வங்க தலைநகர் கொல்கத்தா, மணிப்பூர் தலைநகர் இம்பால் உள்ளிட்ட பிற பகுதிகளிலும் நிலஅதிர்வு உணரப்பட்டது. வங்கதேசத்தின் டாக்கா மற்றும் சட்டோகிராமிலும் நில அதிர்வு பதிவாகியுள்ளது.

சீனாவின் யுன்னான் மாகாணத்திலும் வலுவான நிலஅதிர்வு ஏற்பட்டதாக சீன நிலநடுக்க கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே மியான்மர் மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் ரயில் மற்றும் விமானச் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில் மியான்மர், தாய்லாந்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி கவலை தெரிவித்துள்ளார். நிலநடுக்கப்ப பகுதியில் அனைவரின் பாதுகாப்பு, நல்வாழ்வுக்காக வேண்டுகிறேன். மேலும் நிலநடுக்க பாதிப்புகளைக் கையாள சாத்தியமான உதவிகளை வழங்க இந்தியா தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பதால் பிரதமர் மோடியின் தாய்லாந்து பயணம் (அடுத்த வாரம்) ரத்தாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.