அறிவியல் உலகில் ஆயிரம் மாற்றங்கள் நிகழ்ந்தாலும், அதைக் கண்டுகொள்ளாத இன்னும் ஒருசிலர் ஆதிகால வாழ்க்கையே வாழ்ந்து வருகின்றனர். அதிலும் இன்னும் சிலர், தங்களது மதக் கோட்பாடுகள், சடங்குகளைவிட்டு வெளியே வருவதே இல்லை. அதை நாம் எப்போதும் தவறு சொல்வதில்லை. அதேநேரத்தில், பகுத்தறிவு சிந்தனை இல்லாத சடங்களை நாம் முழுமையாக நம்பி அதைப் பின்பற்றினால் மோசமான விளைவுகளே ஏற்படும். அப்படியான ஒரு சம்பவம்தான் நடிகை ஒருவருக்கு ஏற்பட்டுள்ளது.
மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த பிரபல நடிகை மார்செலா அல்காசர் ரோட்ரிக்ஸ் (Marcela Alcazar Rodriguez). இவர் மதச் சடங்குகளில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர். அந்த வகையில், மெக்சிகோவில் நடைபெற்ற ஆன்மிக விழாவில் கலந்துகொண்டுள்ளார். அந்த விழாவில், கொம்போ என்ற பானத்தை நடிகை மார்செலா அருந்தியுள்ளார். அதாவது, ராட்சத இலை தவளை எனப்படும் அமேசானிய ராட்சத குரங்கு தவளையின் விஷத்தை அருந்தியுள்ளார். தென் அமெரிக்காவிலிருந்து வரும் தவளை விஷம் கொண்ட இந்த பானம் பாரம்பரியமாக நச்சு சுத்திகரிப்புக்காக பழங்குடி சமூகங்களால் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் சில நாடுகளில் தடைசெய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதை அருந்துவதன் மூலம், உடலில் இருக்கும் அழுக்குகள் நீங்கும் என்பது அந்த சடங்காகச் சொல்லப்படுகிறது.
ராட்சத இலை தவளை விஷம் நமது உடலில் சென்று, உடலில் இருக்கும் கெட்ட விஷயங்களை எல்லாம் அழித்துவிடும் என்பதாக நம்பி இதுபோல செய்கிறார்கள். ஆனால், அறிவியல்ரீதியாக இதற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை. அந்தச் சடங்கு விழாவின்போதுதான் நடிகை இந்தப் பானத்தை குடித்துள்ளார். இதனால், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கால் அவதிப்பட்ட அவர், நேரம் செல்லச்செல்ல மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டார். இதையடுத்து உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், கடந்த டிசம்பர் 1ஆம் தேதி அவர் சிகிச்சை பலனில்லாமல் பரிதாபமாக உயிரிழந்தார்.
நடிகை மார்செலா அல்காசர் ரோட்ரிக்ஸ் மரணத்திற்கு மெக்சிகோவில் உள்ள பிரபல மபச்சே பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் இரங்கல் தெரிவித்துள்ளது. மேலும், இன்ஸ்டாகிராமிலும் பலரும் நடிகை மார்செலாவுக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். மேலும், இதுபோன்ற சடங்குகளை யாரும் பின்பற்றக்கூடாது என்றும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.