சமூக ஊடகங்கள் சிறார்களைத் திட்டமிட்டே அடிமையாக்குகின்றனவா? லாபத்திற்காக இளைய தலைமுறையின் மனநலம் அடகு வைக்கப்படுகிறதா? இந்த அதிரடி கேள்விகளுக்குப் பதிலளிக்க, மெட்டா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், கலிபோர்னியா நீதிமன்றத்தில் முதல்முறையாக ஒரு ஜூரி முன்னிலையில் ஆஜராகியுள்ளார். உலகமே உற்று நோக்கும் இந்த 'Social Media Addiction' குறித்த வழக்கின் விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்..
இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் தளங்கள், சிறுவர்களைத் தங்கள் செயலிகளுக்கு அடிமையாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகத் தொடரப்பட்ட ஆயிரக்கணக்கான வழக்குகளில், இது ஒரு முன்னோடி (Landmark trial) வழக்காகும். தற்போது 20 வயதாகும் 'கேலி' (Kaley) என்ற இளம்பெண், தான் சிறுமியாக இருந்தபோது இந்தச் செயலிகளால் கடும் மன உளைச்சலுக்கும் தற்கொலை எண்ணங்களுக்கும் தள்ளப்பட்டதாகக் கூறி மெட்டா மற்றும் யூடியூப் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார்.
நீதிமன்ற விசாரணையின் போது, முன்னணி வழக்கறிஞர் மார்க் லானியர் (Mark Lanier) மெட்டா நிறுவனத்தின் அதிர்ச்சியூட்டும் உள்நாட்டு மின்னஞ்சல்களை ஆதாரங்களாக முன்வைத்தார். குறிப்பாக, மெட்டாவின் முன்னாள் உலகளாவிய விவகாரத் தலைவர் நிக் கிளெக் (Nick Clegg) எழுதிய மின்னஞ்சல் ஒன்றில், "நிறுவனத்தின் வயதுக் கட்டுப்பாடுகள் முறையாக அமல்படுத்தப்படவில்லை, இதனால் நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம் என்று கூறுவது கடினம்" என அவர் கவலை தெரிவித்துள்ளார். மேலும், 13 வயதுக்குட்பட்ட 'ட்வீன்ஸ்' (Tweens) எனப்படும் சிறுவர்களைத் தளத்தில் தக்கவைப்பது குறித்தும், 2017-ஆம் ஆண்டில் 'டீனேஜ்' (Teenage) பயனர்களை அதிகரிப்பதே நிறுவனத்தின் முதன்மை இலக்கு என ஜூக்கர்பெர்க் நிர்ணயித்ததும் அம்பலமானது.
இதற்குப் பதிலளித்த மார்க் ஜூக்கர்பெர்க், வழக்கறிஞர்கள் தனது மின்னஞ்சல்களைத் தவறாகச் சித்தரிப்பதாக குற்றம் சாட்டினார். சிறுவர்களுக்கெனப் பாதுகாப்பான 'மெசஞ்சர் கிட்ஸ்' போன்ற தளங்களை உருவாக்குவது குறித்தே தாங்கள் விவாதித்ததாகவும், அதைத் தனது சொந்தக் குழந்தைகளே பயன்படுத்துவதாகவும் கூறியுள்ளார்.
விசாரணையின் ஒரு பகுதியாக, 'அடிமைத்தனம்' குறித்த காரசாரமான விவாதாங்கள் நடைபெற்றது. இன்ஸ்டாகிராம் தலைவர் ஆடம் மொஸேரி (Adam Mosseri) முன்னதாக அளித்த சாட்சியத்தில், ஒரு நாளைக்கு 16 மணிநேரம் பயன்படுத்துவதை அடிமைத்தனம் என்று கூற முடியாது என வாதிட்டிருந்தார்.
இது குறித்து ஜூக்கர்பெர்க்கிடம் கேட்டபோது, "ஒரு விஷயம் பயனுள்ளதாக இருந்தால் மக்கள் அதை அதிகமாகப் பயன்படுத்துவார்கள்" எனப் பதிலளித்தார். ஆனால், போதைக்கு அடிமையானவர்களும் ஒரு பொருளைத் தேடித் தேடிப் பயன்படுத்துவார்களே என்ற வழக்கறிஞரின் கேள்விக்கு, தன்னிடம் தெளிவான பதில் இல்லை என்பதை அவர் மறைமுகமாக ஒப்புக்கொண்டார்.
இந்த வழக்கில் ஏற்கனவே குற்றம் சாட்டப்பட்டிருந்த டிக்டாக் மற்றும் ஸ்னாப்சாட் நிறுவனங்கள், நீதிமன்றத்திற்கு வெளியே ரகசியமாகச் சமரசம் செய்துகொண்டு வெளியேறிவிட்டன. ஆனால், மெட்டாவும் கூகுளின் யூடியூப்பும் மட்டுமே இந்தச் சட்டப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வருகின்றன.
ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் ஏற்கனவே 16 வயதுக்குட்பட்டவர்களுக்குச் சமூக ஊடகத் தடை விதித்துள்ள நிலையில், அமெரிக்க நீதிமன்றம் அளிக்கப்போகும் இந்தத் தீர்ப்பு, உலகளாவிய டிஜிட்டல் தளங்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.