எப்ஸ்டீன் விருந்தில் மஸ்க் & ஜுக்கர்பெர்க்..? அடுத்தடுத்து அதிர வைக்கும் கோப்புகள்!
ஜெஃப்ரி எப்ஸ்டீனின் புதிய கோப்புகள், 2008 இல் குற்றச்சாட்டுகளுக்கு பிறகும், எலன் மஸ்க் மற்றும் மார்க் ஜுக்கர்பெர்க் ஆகியோர் கலிபோர்னியாவில் ஒரு ஆடம்பர விருந்தில் கலந்து கொண்டதை வெளிப்படுத்துகின்றன. மஸ்க் முன்னதாக எப்ஸ்டீனின் விருந்துகளில் கலந்து கொள்ளவில்லை என்று கூறியிருந்தார், ஆனால் இப்போது புதிய புகைப்படங்கள் மற்றும் மின்னஞ்சல்கள் அவரின் பங்கேற்பை சுட்டிக்காட்டுகின்றன.
செய்தியாளர் - திவ்யா
அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், அரச குடும்பத்தினர் மற்றும் பிரபலங்கள் என உலகின் செல்வாக்குமிக்க மனிதர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர் ஜெஃப்ரி எப்ஸ்டீன். இவர் 2019ஆம் ஆண்டில், சிறுமிகளைக் கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக அமெரிக்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். தனது செல்வாக்கையும் பணத்தையும் பயன்படுத்தி சிறுமிகளைத் தவறாகப் பயன்படுத்தியதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. அவர் கைது செய்யப்பட்ட சில வாரங்களிலேயே, நியூயார்க் சிறையில் சடலமாக மீட்கப்பட்டார்.
இது தற்கொலை என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டாலும், அவரது மரணம் உலகளவில் பல மர்மங்களையும் சர்ச்சைகளையும் கிளப்பியது. குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட எப்ஸ்டீன், முக்கிய நபர்களுடன் நெருங்கிய தொடர்புகளுடன் இருந்தார் என்பதை சமீபத்திய வெளிப்பாடுகள் காட்டுகின்றன.
எப்ஸ்டீன் விருந்தில் மஸ்க் & ஜுக்கர்பெர்க்..?
இந்நிலையில், ஜெஃப்ரி எப்ஸ்டீன் கோப்புகளின் புதிய தொகுப்பில் உள்ள ஒரு புகைப்படம், 2008 ஆம் ஆண்டு எப்ஸ்டீன் சிறார்களைக் கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட பிறகும், மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் டெஸ்லா தலைவர் எலன் மஸ்க் ஆகியோருடன் கலிபோர்னியாவில் ஒரு ஆடம்பரமான இரவு விருந்தில் கலந்துகொள்வதைக் காட்டுகிறது. இந்தப் புகைப்படத்தை எப்ஸ்டீன் ஆகஸ்ட் 2015 இல் மின்னஞ்சல் மூலம் அனுப்பியதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, "எப்ஸ்டீனின் எந்த விருந்துகளிலும் நான் ஒருபோதும் கலந்து கொண்டதில்லை" என்று மஸ்க் கூறி இருந்த நிலையில் இது வந்துள்ளது. மேலும் இந்தப்பதிவில், பாலியல் குற்றவாளியுடன் இணைந்து குற்றங்களைச் செய்தவர்கள் மீதும் வழக்குத் தொடர வேண்டும் என்று கூறி இருந்தார் மஸ்க். முன்னதாக நவம்பர் 25, 2012 தேதியிட்ட மின்னஞ்சலில், மஸ்க், எப்ஸ்டீனுக்கு மின்னஞ்சல் அனுப்பி, " தீவில் விருந்து எப்போது? பகல்/இரவு?" என்று கேட்டதாகக் கூறப்படுகிறது.
எப்ஸ்டீன் கோப்புகளில் பல்வேறு நபர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ள நிலையில், சிலர் அதற்கு மறுப்பு தெரிவித்து வருகின்றனர். முன்னதாக, சர்ச்சைக்குரிய ஜெப்ரி எப்ஸ்டீன் ஆவணங்கள் குறித்து பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட் மிடில்டன் தங்களது முதல் அதிகாரப்பூர்வ கருத்தை வெளியிட்டனர். புதிய ஆவணங்களில் மன்னர் சார்லஸின் சகோதரரும், இளவரசர் வில்லியமின் உறவினரான முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூவின் பெயரும், சில புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் நிலையில், அவர்களது அறிக்கை வெளிவந்தது.

