மார்க் ஜூக்கர்பெர்க்கின் (Mark Zuckerberg) மெட்டா (META) நிறுவனத்தின் கீழ் பேஸ்புக், வாட்ஸ்அப் ,இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட செயலிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த செயலிகளை உலகம் முழுவதும் பல கோடி மக்கள் பயன்படுத்தி வரும் நிலையில், அதில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகமாகவுள்ளது.
அதிலும் குறிப்பாக இன்ஸ்டாகிராம் செயலி 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களின் விருப்பமான செயலியாக உள்ளது. பேஸ்புக், இன்ஸ்டாகிராம் செயலிகளில் பாலியல் உள்ளடக்கம் கொண்ட செய்திகள் இருப்பதால், அதனை பார்க்கும் சிறார்கள், குழந்தைகள் பாதிக்கப்படுவர் என்று நீண்ட காலமாக விமர்சனம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சமூக ஊடகங்களில் சிறுவர்களை இலக்கு வைத்து நடைபெறும் தவறான செயல்கள் மற்றும் ஆபத்துகளிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கத் தவறியதற்காகவும், போதிய பாதுகாப்பு அம்சங்களை நடைமுறைப்படுத்தாததற்காகவும் மெட்டா நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற விவகாரங்களில் மெட்டா நிறுவனத்துக்கு எதிராக அமெரிக்கா முழுவதும் பல்வேறு வழக்குகள் நடந்து வரும் நிலையில், அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ (New Mexico) மாநிலத்தில் தொடரப்பட்ட வழக்கில் மெட்டா நிறுவனத்தின் மீதான குற்றசாட்டு உறுதிசெய்யப்பட்டு, இதற்காக 567 மில்லியன் அமெரிக்க டாலர், அதாவது இந்திய மதிப்பில் சுமார் 4,750 கோடி அபராதம் வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் சிறுவர்களை இலக்கு வைத்து நடைபெறும் தவறான செயல்கள் மற்றும் பாலியல் ஆபத்துகளிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கத் தவறியதற்காகவும், போதிய பாதுகாப்பு அம்சங்களை நடைமுறைப்படுத்தாததற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவுள்ளதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.