Messi Reuters
உலகம்

'4 வெடிகுண்டுகளைக் கட்டிக்கொண்டு..' மெஸ்ஸிக்கு கொலை மிரட்டலா.? வெளியான அதிர்ச்சி தகவல்!

அதே நாளில், மைதானத்தின் குப்பைத் தொட்டிகளில் மூன்று வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாகவும் போலீசாருக்கு தொலைபேசி மூலம் மற்றொரு மிரட்டல் வந்துள்ளது.

Premkumar S

2026 பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின்போது அர்ஜென்டினா கேப்டன் லியோனல் மெஸ்ஸியை குறிவைத்து தற்கொலைத் தாக்குதல் நடத்த சதி செய்யப்பட்டதாகக் கூறப்படும் காவல்துறை ஆவணம் கசிந்துள்ளது. ஜூலை 7 அன்று அட்லாண்டா மைதானத்தில் நான்கு வெடிகுண்டுகளைக் கட்டிக்கொண்டு மெஸ்ஸியை கொல்லப் போவதாக சமூக வலைதள மிரட்டல், குப்பைத் தொட்டிகளில் வெடிகுண்டுகள் வைத்ததாக தொலைபேசி தகவல் என பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் எழுந்தன.

2026 பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின்போது அர்ஜென்டினா அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸியை குறிவைத்து தாக்குதல் நடத்த சதி செய்யப்பட்டதாகக் கூறப்படும் காவல்துறை ஆவணம் ஒன்று கசிந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அந்த ஆவணத்தின்படி, மெஸ்ஸி பங்கேற்ற போட்டிகளைச் சுற்றி பல்வேறு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, கடந்த ஜூலை 7-ம் தேதி அர்ஜென்டினா - எகிப்து அணிகள் மோதிய போட்டியின்போது, அட்லாண்டா மைதானத்துக்குள் நுழைந்து மெஸ்ஸியை குறிவைத்து தற்கொலைத் தாக்குதல் நடத்தப் போவதாக ஒருவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டதாக கூறப்படுகிறது.

Messi

அந்த பதிவில், தனது உடலில் நான்கு வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு மைதானத்துக்குள் நுழைந்து மெஸ்ஸியை வெடிகுண்டு மூலம் கொல்லப் போவதாக மிரட்டல் விடுக்கப்பட்டதாக போலீஸ் ஆவணத்தை மேற்கோள் காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதே நாளில், மைதானத்தின் குப்பைத் தொட்டிகளில் மூன்று வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாகவும் போலீசாருக்கு தொலைபேசி மூலம் மற்றொரு மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் உள்ளிட்ட பாதுகாப்புப் படையினர் மைதானத்தை முழுமையாக சோதனை செய்துள்ளனர்.

மேலும், மெஸ்ஸி மட்டுமின்றி கிறிஸ்டியானோ ரொனால்டோ, கிலியன் எம்பாப்பே மற்றும் நடுவர்கள் உள்ளிட்டோருக்கும் உலகக் கோப்பையின்போது மிரட்டல்கள் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இருந்ததாக அந்த ஆவணம் சுட்டிக்காட்டுகிறது.

FIFA 2026

அதேசமயம், இந்தச் சம்பவங்கள் அனைத்தும் அமெரிக்காவின் FBI அமைப்பால், சர்வதேச காவல்துறை ஒத்துழைப்பு மையத்துடன் (IPCC) இணைந்து கண்காணிக்கப்பட்டதாக காவல்துறை ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

எனினும், இந்த அச்சுறுத்தல் தொடர்பான முழுமையான விவரங்கள் மற்றும் அதன் நம்பகத்தன்மை குறித்து அதிகாரப்பூர்வமாக அனைத்து தகவல்களும் உறுதி செய்யப்படவில்லை. கசிந்த ஆவணத்தில் இடம்பெற்றுள்ள தகவல்கள் உண்மையா? என்பது தொடர்பாக விசாரணைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.