flight ANI
உலகம்

விமானத்தின் மீது விழுந்த பேரிடி! கதிகலங்கிய விமான பயணிகள்! பரபரப்பு.. திக் திக் நிமிடங்கள்!

சீனாவில் ஓடுதளத்திற்கு வந்த விமானத்தின் மீது பெரும் இடி ஒன்று விழுந்துள்ளது.

PT WEB

சீனா சவுத்தர்ன் ஏர்லைன்ஸ் CZ3209 விமானம் ஷென்செனில் இருந்து வூக்ஸி நோக்கி புறப்பட முனைந்தபோது, பலத்த காற்று, கனமழை மத்தியில் மின்னல் பேரிடி விமானத்தின் மீது விழுந்தது. அடிப்பகுதி, வால் பகுதி உள்ளிட்ட இடங்களில் 20-க்கும் மேற்பட்ட மின்னல் தாக்க அடையாளங்கள் உறுதி செய்யப்பட்டதால், பயணிகள் பாதுகாப்புக்காக விமானம் மாற்றப்பட்டு, பயணம் 3–4 மணி நேரம் தாமதமானது. தொழில்நுட்ப குழு, அலுமினியக் கலவை உடல் மற்றும் மின்னல் பாதுகாப்பு வடிவமைப்புகள் காரணமாக கேபினில் பாதிப்பு ஏதும் இல்லை என விளக்கியது.

சீனா சவுத்தர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் CZ3209 என்ற விமானம், சீனாவின் ஷென்சென் பாவோன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, ஜியாங்சு மாகாணத்தில் உள்ள வூக்ஸி பகுதிக்கு பயணிக்க இருந்தது.

மாலை நேரத்தின்போது விமானம் புறப்படுவதற்கு முன்பு, விமான நிலைய பகுதியில், பலத்த காற்றுடன், கனமழை பெய்யத் தொடங்கியது. இருப்பினும், விமானத்தை ஓடுபாதைக்கு கொண்டு வந்த விமானி, பறப்பதற்கு ஆயத்தமானார்.

flight

ஆனால், அந்த சமயத்தில் மிகப்பெரிய சத்தத்துடன் பேரிடி ஒன்று விமானத்தின் மீது விழுந்ததால், பயணிகள் அனைவரும் அச்சம் அடைந்தனர். இதையடுத்து, பயணத்தை பாதியிலேயே நிறுத்திய தலைமை விமானி, ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டதா என்று, தொழில்நுட்ப குழுவுடன் இணைந்து, விமானத்தை ஆய்வு செய்தார்.

அதன் விமானத்தின் அடிப்பகுதியிலும், வால் பகுதியிலும் மின்னல் தாக்கியதற்கான 20-க்கும் மேற்பட்ட அடையாளங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, விமானம் உடனடியாக மாற்றப்பட்டு, வேறொரு விமானம் மூலம் பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் இந்தப் பயணம் சுமார் 3 முதல் 4 மணி நேரம் தாமதமானது.

flight

இடி தாக்கியது குறித்து தங்களது அனுபவத்தை பகிர்ந்துக் கொண்ட பயணிகள், விமானம் நகர்ந்து கொண்டிருந்தபோது பலத்த காற்று மற்றும் மழையால் குலுங்கியதுடன், விமானத்திற்கு மிக அருகில் பயங்கர சத்தத்துடன் மின்னல் தாக்கியதை உணர்ந்ததாக தெரிவித்தனர்.

இவ்வளவு பெரிய மின்னல் தாக்கியபோதும், ஏன் பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்று எழுந்த கேள்விக்கு, தொழில்நுட்ப குழுவினர் தங்களது பதிலை அளித்தனர். அதன்படி, விமானத்தின் வெளிப்புறம் அலுமினியக் கலவையால் உருவாகியிருப்பதால், மின்னல் தாக்கியபோது பாய்ந்த மின்சாரமானது விமானத்தில் வெளிப்புற பகுதி வழியாகவே வெளியேறியது. அதனால் தான் கேபினுக்குள் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. மேலும், விமானத்தில் உள்ள முக்கிய மின்னணுச் சாதனங்கள் அனைத்தும் மின்னல் பாதுகாப்பு வடிவமைப்புகளைக் கொண்டுள்ளதால் பயணிகள் அச்சப்படத் தேவையில்லை என்று, தொழில்நுட்ப குழுவினர் தெரிவித்தனர்.