model image x page
உலகம்

ஜப்பான் | வேண்டுமென்றே தவறு செய்துவிட்டு சிறை செல்லும் முதியோர்கள்.. காரணம் என்ன?

ஜப்பானில் முதியோர்கள் சிறப்பாய் வாழ்வதற்காகவே, வேண்டுமென்றே குற்றங்களைச் செய்துவிட்டு சிறைகளில் வாழ்வதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

Prakash J

ஜப்பானில் முதியோர்கள் சிறப்பாய் வாழ்வதற்காகவே, வேண்டுமென்றே குற்றங்களைச் செய்துவிட்டு சிறைகளில் வாழ்வதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ஜப்பானின் மிகப்பெரிய பெண்கள் சிறையாக டோச்சிகி சிறை கருதப்படுகிறது. இது, டோக்கியோவிற்கு வடக்கே அமைந்துள்ளது. இங்கு, கிட்டத்தட்ட 500 கைதிகள் உள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் வயதானவர்களாக உள்ளனர்.

model image

இங்குள்ள பெண் கைதிகளில் சிலர், “நாங்கள் பொருளாதாரரீதியாக நல்ல நிலைமையில் வாழ முடியவில்லை. குறிப்பாக, பிள்ளைகளால் அடிக்கடி வீட்டைவிட்டு வெளியேற்றப்படுகிறோம். உணவும் கிடைப்பதில்லை; உடல் நலத்திலும் அக்கறை கொள்வதில்லை. இதன்காரணமாகவே ஏதாவது ஒரு தவறைச் செய்துவிட்டு சிறைக்கு வந்துவிடுகிறோம். சிறையில் இருந்து திரும்பினாலும், மீண்டும் தவறு செய்துவிட்டு உள்ளே வருகிறோம். இங்கு அனைத்து உதவிகளும் கிடைக்கப் பெறுகிறது. நன்றாகக் கவனித்துக் கொள்கிறார்கள்” என அவர்கள் தெரிவித்ததாக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு அரசாங்கத் தரவுகளின்படி, ஜப்பானில் 65 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களின் எண்ணிக்கை 36.25 மில்லியனாக உயர்ந்துள்ளது. இதில், 20.53 மில்லியன் பெண்களும், 15.72 மில்லியன் ஆண்களும் உள்ளனர். ஜப்பானின் மொத்த மக்கள்தொகையில் முதியோர்களின் எண்ணிக்கை தற்போது 29.3 சதவீதமாக உள்ளது. இது, கடந்தகாலங்களைவிட உயர்வாகும்.

ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட முதியவர்கள் வசிக்கும் 200 நாடுகளில் ஜப்பான் முதலிடத்தில் உள்ளது. இந்த பட்டியலில், இத்தாலி, போர்ச்சுகல், கிரீஸ், பின்லாந்து, ஜெர்மனி மற்றும் குரேஷியா ஆகிய நாடுகள் முதல் 10 இடங்களுக்குள் உள்ளன. இந்நாடுகளில் வசிக்கும் முதியவர்களின் எண்ணிக்கை 20 சதவீதம் ஆகும். தென் கொரியாவில்19.3 சதவீதம் மற்றும் சீனாவில் 14.7 சதவீதம் முதியவர்கள் வாழ்கின்றனர்.

japan

ஜப்பானில் பெரும்பாலானோர் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பாததால் நாளுக்குநாள் மக்கள்தொகை குறைந்து வருகிறது. இதனை மாற்ற அரசு எவ்வளவோ முயற்சி செய்தும் எந்த பலனும் கிடைக்கவில்லை. இதன் காரணமாகவே, முதியவர்கள் அதிகம் வசிக்கும் நாடாக ஜப்பான் மாறியுள்ளதாகக் கூறப்படுகிறது.

டோக்கியோவை தளமாகக் கொண்ட தேசிய மக்கள்தொகை மற்றும் சமூக பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம், 2040க்குள் நாட்டின் மக்கள்தொகையில் 34.8 சதவீதத்தை வயதான ஜப்பானியர்கள் உருவாக்குவார்கள் என்று கணித்துள்ளது. டோக்கியோவில் உள்ள ஒரு சிந்தனைக் குழுவான Recruit Works Institute கடந்த ஆண்டு வெளியிட்ட ஓர் ஆய்வில், ஜப்பான் அதன் மக்கள்தொகையை இழந்து வருவதால், 2040இல் 11 மில்லியனுக்கும் அதிகமான தொழிலாளர்கள் பற்றாக்குறையை எதிர்கொள்ளக்கூடும் என எச்சரித்துள்ளது.