ட்ரம்ப் - பெசெஷ்கியன் எக்ஸ் தளம்
உலகம்

US - ஈரான் ஒப்பந்தம் | ட்ரம்புக்கு எதிராக நெதன்யாகு.. லெபனானைத் தாக்கும் இஸ்ரேல்!

ஈரான் - அமெரிக்கா ஒப்பந்தம் உடனடியாக அமலுக்கு வந்திருப்பது, இஸ்ரேலுக்குச் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, அது லெபனான் மீது தாக்குதலைத் தொடங்கியுள்ளது.

Prakash J

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய மோதலால், உலகின் 20% கச்சா எண்ணெய் வர்த்தகம் நடைபெறும் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டது. இதனால் உலகளாவிய எண்ணெய் விநியோகமும், சர்வதேச வர்த்தகமும் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்தச் சூழலில்தான், பாகிஸ்தான் மற்றும் கத்தார் உள்ளிட்ட நாடுகளின் மத்தியஸ்தம் காரணமாக, மோதலுக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலான ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ள அமெரிக்காவும் ஈரானும் கடந்த ஜூன் 14ஆம் தேதி ஒப்புக்கொண்டன.

இதையடுத்து, 14 அம்சங்கள் கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் ஈரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியன் ஆகியோர் கடந்த 18ஆம் தேதி பிரான்ஸின் வெர்சாய்ஸ் அரண்மனையில் கையெழுத்திட்டுள்ளனர். இந்த ஒப்பந்தம் உடனடியாக அமலுக்கு வந்துள்ளதால் ஈரான் மீதான கடல்வழித் தடையை அமெரிக்கா நீக்கியுள்ளது. இதனால் முக்கியப் பகுதியான ஹார்முஸ் நீரிணை வழியாக சர்வதேச எண்ணெய்க் கப்பல் போக்குவரத்து தடையின்றித் தொடங்கியுள்ளது.

மேலும், அடுத்தகட்டப் பேச்சுவார்த்தைக்காக இரு நாடுகளுக்கும் 60 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதுடன், அமெரிக்காவுடன் நேரடியாகப் பேச ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனியும் ஒப்புதல் அளித்துள்ளார். அதேநேரத்தில், இந்த ஒப்பந்தம் குறித்து இஸ்ரேல் தனது அதிருப்தியை வெளிக்காட்டியது. இந்த நிலையில், தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

லெபனான் உட்பட அனைத்து முனைகளிலும் ராணுவ நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் என இந்த ஒப்பந்தம் கூறும் நிலையில், ஹிஸ்புல்லா அச்சுறுத்தல் முழுமையாக ஒழியும்வரை லெபனானிலிருந்து வெளியேறப் போவதில்லை என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதனால், சுவிட்சர்லாந்தில் நடக்கவிருந்த அமெரிக்கா - ஈரான் இடையிலான அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகளும் தாமதமாகியுள்ளன. மேலும், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க போர் நிறுத்த ஒப்பந்தக் கையெழுத்து விழாவிற்காக, சுவிட்சர்லாந்து செல்லவிருந்த அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி.வான்ஸின் பயணம் தள்ளிப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.