மத்திய கிழக்கில் ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து தாக்குதல் நடத்தின. ஒரு மாதத்திற்கும் மேல் நடைபெற்ற இந்த தாக்குதல், பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்ததன் விளைவாக, 2 வார காலத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்டது. எனினும், பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற நிரந்தப் போர்நிறுத்தம் பேச்சுவார்த்தை தோல்வியடைந்திருக்கும் நிலையில், மீண்டும் ஈரான் மற்றும் இஸ்ரேல் - அமெரிக்கா இடையே போர்ச்சுழல் அதிகரித்திருக்கிறது.
அதேசமயம், ஈரானுக்கு ஆதரவு தெரிவித்து லெபானானைச் சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், இஸ்ரேல் லெபனான் மீதும் கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த சூழலில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இஸ்ரேல் படைகள் பெய்ரூட்டின் மத்தியப் பகுதிகள் மற்றும் தெற்கு லெபனான் மீது கிட்டத்தட்ட 100 இடங்களில் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. மக்கள் நடமாட்டம் மிகுந்த இடங்களிலும் இஸ்ரேல் குண்டுகளை வீசிய நிலையில், 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
இந்த சூழலில் தான், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 200-க்கும் மேற்பட்ட இஸ்ரேல் இலக்குகளை இஸ்ரேல் விமானம்படை தாக்கி அழித்திருப்பதாக இஸ்ரேல் பாதுகாப்புப்படை தெரிவித்துள்ளது. இதுகுறித்து, வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்திய கட்டிடங்கள், பதுங்கு குழிகள் மற்றும் சுமார் 20 ராக்கெட் ஏவுதளங்கள் இந்தத் தாக்குதலில் முற்றிலும் தகர்க்கப்பட்டன. இந்த ஏவுதளங்கள் சமீபத்தில் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப் பயன்படுத்தப்பட்டவை என இஸ்ரேல் ராணுவம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த ஒரு வாரமாக பெய்ரூட் போன்ற லெபனானின் மையப் பகுதிகளில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தவில்லை. மாறாக, தெற்கு லெபனானில் உள்ள ஹிஸ்புல்லாவின் ராணுவக் கட்டமைப்புகளை அழிப்பதிலேயே இஸ்ரேல் தற்போது முழு கவனம் செலுத்தி வருகிறது. இந்தத் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய வீரர்கள் பலர் கொல்லப்பட்டதாகத் தெரிகிறது.தொடர்ந்து நிலவி வரும் போர்ச் சூழலில், எல்லையோர பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில், இஸ்ரேல் இத்தகைய ஆக்ரோஷமான வான்வழித் தாக்குதல்களை முன்னெடுத்து வருகிறது.