ஈரானில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளுக்கும் ஈரானுக்கும் இரண்டு வாரங்களுக்கு மேலாக போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த தாக்குதலில் முதல் நாளிலேயே ஈரானின் அதிஉயர் தலைவராக இருந்த அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஈரானின் தாக்குதல் பலமடங்கு அதிகரித்தது. மேலும் ஈரானின் ஆதரவு போராளி குழுக்களும் இந்த தாக்குதலில் இணைந்துள்ளனர். லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பும் இஸ்ரேலின் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.
இது இஸ்ரேலுக்கு பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், அந்நாட்டின் மீது இஸ்ரேல் படையெடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் இஸ்ரேலில் இருந்தபடி அந்நாட்டின் மீது ஏவுகணைகள் வீசியும் தாக்குதல் நடத்தி வருகின்றது. இந்த நிலையில், ஹிஸ்புல்லா அமைப்பை நோக்கி இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் குடிமகன் ஒருவரே கொல்லப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று, லெபனான் எல்லைக்கு அருகில் உள்ள பகுதியில் இஸ்ரேலிய ராணுவம் பீரங்கித் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதல் தவறுதலாகத் திசைமாறி இஸ்ரேல் பகுதிக்குள் விழுந்ததில் ஒரு இஸ்ரேலிய குடிமகன் கொல்லப்பட்டுள்ளார்.
இது குறித்து இஸ்ரேல் ராணுவம் தரப்பில், லெபனானின் தெற்குப் பகுதியில் செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேலிய ராணுவம் தாக்குதல் நடத்தியபோது, தவறுதலாகத் குண்டு திசைமாறி சென்றதாகவும், இந்த தாக்குதலுக்கு தாங்களே பொறுப்பு என்றும் கூறியுள்ளது. இந்த சம்பவத்துக்கு இஸ்ரேலிய எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஹிஸ்புல்லாவுடனான போர் காரணமாக வடக்கு இஸ்ரேலில் உள்ள ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். இதன் காரணமாக எங்களைப் பாதுகாக்க அரசு தவறிவிட்டது என்று அந்த பகுதியில் வசித்த மக்கள் அரசுக்கு எதிராக போராடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரானுக்கு எதிராக நடத்தி வரும் தாக்குதல்கள், மத்திய கிழக்கின் வரைபடத்தையே மாற்றி அமைப்பதற்கான ஒரு வரலாற்று வாய்ப்பு என முகமது பின் சல்மான் கருதுவதாக கூறப்படுகிறது. ஈரானின் தற்போதைய ஆட்சி இருக்கும் வரை வளைகுடா நாடுகளுக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடரும் என சவுதி கருதுவதாகவும், இதனால் ஈரானின் ராணுவக் கட்டமைப்பை மட்டும் சிதைக்காமல், அங்குள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகளைத் தாக்க அமெரிக்காவை தூண்டி வருவதாகவும் நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. தொடர் தாக்குதல்கள் மூலம் ஈரானின் பொருளாதாரத்தை முற்றிலுமாக முடக்கி, தற்போதைய ஆட்சிக்கு எதிராக மக்களைத் திரும்பச் செய்வது சவுதி அரேபியாவின் திட்டமாக இருக்கலாம் என்றும் அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.